டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் இந்திய நம்பர் ஒன் இடத்தை பிடித்த தமிழகத்தைச் சேர்ந்த பிரஜ்னேஷ்

Update: 2020-11-23 11:57 GMT

இந்த ஆண்டிற்கான அனைத்து டென்னிஸ் போட்டி தொடர்களும் முடிவுக்கு வரும் நிலையில் தனது சிறப்பான தொடர் வெற்றிகள் மூலம் மிகுந்த மகிழ்ச்சியளித்துள்ளார் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன். அமெரிக்காவில் நடந்த வரும் ஏடிபி சேலஞ்சர் போட்டிகளில் பங்கேற்று வரும் தமிழகத்தைச் சேர்ந்த இவர் கேரி சேலஞ்சர் மற்றும் ஆர்லாண்டோ ஓபன் எனத் தொடர்ந்து இரண்டு தொடர்களின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். மேலும் கடந்த மாதம் ஜெர்மனியில் நடந்த இஸ்மானிங் சேலஞ்சர் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றிகள் மூலம் ஆடவருக்கான உலக‌ டென்னிஸ் தரவரிசையில் 136ஆம் இடத்தில் இருக்கும் மற்றொரு இந்திய வீரரான சுமித் நகாலை விட முன்னேறி அதிகப்படியான ரேங்கிங்ல் இருக்கும் இந்தியர் என்ற பெருமையை மீண்டும் பெற்றார்.

2018 மற்றும் 2019 ஆண்டுகளிலும் இந்த சாதனையை இவர் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த ஆண்டு இவருக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. ஓரே ஆண்டில் நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளுக்கும் தகுதிப்பெற்ற ஒரே இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அதன் பிறகு இந்த ஆண்டு சிறிது தொய்வு கண்டாலும் ஆண்டின் இறுதியில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதேபோல் அடுத்த ஆண்டும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே டென்னிஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

இந்திய மகளிர் டென்னிஸில் சானியா மிர்சாவிற்கு பின் அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியவர் பிரஞ்சலா யாடளப்பள்ளி. சிறப்பாக விளையாடி வந்த இவர் காயம் காரணமாக மிக நீண்ட காலம் எந்த ஒரு போட்டியிலும் விளையாடாமல் ஆஸ்திரேலியாவில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது காலத்திலிருந்து மீண்டும் களமிறங்கியுள்ளார். மெல்போர்னில் நடந்து வரும் யுடிஆர் ப்ரோ சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து இரண்டு வெற்றிகள் பெற்று அசத்தியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இவர் தொடர்ந்து எந்தவித காயமும் இன்றி மேலும் மேலும் வெற்றிகளை குவிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் படிக்க: இலங்கை டி20 லீக் தொடரில் பங்கேற்கும் 4 இந்திய வீரர்கள் யார் தெரியுமா?