“ஒலிம்பிக் போட்டிகளில் விரைவில் கபடி இடம்பெறும்”-இந்திய கபடி கேப்டன்

Update: 2020-09-11 02:20 GMT

கபடி விளையாட்டில் இந்தியா அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறது. இந்திய அணியில் பல வீரர்கள் சிறப்பு திறமை வாய்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுள் ஒருவர் தான் தற்போதைய இந்திய கபடி அணியின் கேப்டன் தீபக் ஹூடா. இவர் அண்மையில் அர்ஜூனா விருதை வென்றுள்ளார்.

இந்நிலையில் கபடி குறித்தும் தனது விருது குறித்தும் தீபக் ஹூடா ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், “ஒலிம்பிக் விளையாட்டு அல்லாமல் தேசிய விருது பெற்ற சில விளையாட்டு வீரர்களில் கபடி வீரர்களும் அடங்குவர். இதனை வைத்து பார்க்கும் போது தற்போது கபடி விளையாட்டும் அங்கீகரிக்கப்படுகிறது எனத் தெரிய வருகிறது.

மேலும் ப்ரோ கபடி போட்டிகள் மிகவும் கவனிக்கப் பட்டு வருகின்றன. அத்துடன் பல நாடுகள் கபடி விளையாட்டில் தற்போது வளர்ந்துள்ளன. எனவே இன்னும் ஒரு சில ஆண்டுகளுக்குள் ஒலிம்பிக் போட்டிகளில் கபடி சேர்க்கப்படும்.

ஒரு விளையாட்டின் உண்மையான வளர்ச்சி என்றால் அதை பல நாடுகள் கற்றுக் கொண்டு சிறப்பாக விளையாடுவதேயாகும். தற்போது தென்கொரியா, ஈரான் போன்ற நாடுகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. எனவே விரைவில் கபடி விளையாட்டு ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும்.

நான் கபடி விளையாட ஆரம்பித்தப் போது இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது. எனினும் ராகேஷ் குமார் மற்றும் அனுப் குமார் ஆகிய வீரர்கள் அர்ஜூனா விருது பெறுவதை கண்டவுடன் எனக்கும் அந்த ஆசை ஏற்பட்டது. அந்த விருதை பெற்றால் தான் நான் ஒரளவு சாதித்த வீரராக முடியும் என கருதினேன். தற்போது அந்த விருதை நான் பெற்று சாதித்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு தேசிய விளையாட்டு விருதுகளில் கபடியிலிருந்து மூன்று பேருக்கு விருதுகள் கிடைத்தன. தீபக் ஹூடாவிற்கு அர்ஜூனா விருதும், பயிற்சியாளர் கிருஷ்ண குமாருக்கு துரோணாச்சார்யா விருதும், முன்னாள் வீரர் மன்பிரீத் சிங்கிற்கு தயான்சந்த் விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: இரண்டு ஆண்டுகளாக அரசு வேலைக்காக போராடும் தங்கப்பதக்கம் வென்ற கோ-கோ வீராங்கனை