ஜல்லிக்கட்டு டூ வழுக்கு மரம் ஏறுதல் - பொங்கலும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளும் !

Update: 2021-01-14 06:45 GMT

தமிழர் பாரம்பரியங்களுடன் மிகவும் ஒன்று இருக்கும் ஒரு பண்டிகை என்றால் அது பொங்கல் தான். உழவர் திருநாளான இன்று தமிழ் மக்கள் அனைவரும் மதபேதமின்றி தங்கள் வீட்டுகளில் பொங்கல் வைத்து மகிழ்வார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த பொங்கல் பண்டிகையின் போது உழவர்கள் தங்களின் அறுவடைக்கு பிறகு விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்று மகிழ்வார்கள்.

இதற்காக நமது தமிழ் பண்பாட்டில் பல பாரம்பரிய விளையாட்டுகள் உள்ளன. இதில் மிகவும் முக்கியமான ஒன்று தான் ஜல்லிக்கட்டு. உழவன் தனது விவசாயத்திற்கு பயன்படும் காளை மாடுகளை தழுவி பிடித்து விளையாடும் விளையாட்டு தான் ஜல்லிக்கட்டு ஆகும். இதற்கு ஏறுதழுவல்’ என்ற பெயரும் உண்டு.

மற்றொரு சிறப்பான பொங்கல் விளையாட்டு வழுக்கு மரம் ஏறுதல். இந்த விளையாட்டில் எண்ணெய் தடவி இருக்கும் பெரிய கம்பத்தை தங்கள் மீது எண்ணெய் தேய்த்து கொண்டு இளைஞர்கள் சிலர் ஏற முயற்சி செய்வார்கள். இறுதியாக கம்பத்தின் மேலே செல்லும் நபர் அதில் தொங்கவிடப் பட்டிருக்கும் பரிசை எடுத்துக் கொள்வார். இந்த விளையாட்டு இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற ஒன்று.

இதேபோல கம்பத்தின் மீது நின்று யோகாசானம் செய்யும் வகையான விளையாட்டு தான் மல்லர் கம்பம். இந்த விளையாட்டில் பயன்படுத்த படும் கம்பம் வழுக்காமல் இருக்கும். இந்த விளையாட்டு சற்று கடினமான ஒன்று தான். இதனை விளையாட சற்று பயிற்சி தேவைப்படும்.

மதுரை பகுதியில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மிகவும் பிரபலம். ஜல்லிக்கட்டு தவிர கபடி, சிலம்பம், உரி அடித்தல் போன்ற விளையாட்டுகளும் பொங்கல் பண்டிகையின் போது அங்கு நடப்பது வழக்கம்.

இவை தவிர மாலை நேரங்களில் புலிவேஷம், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களும் பொங்கல் பண்டிகையின் போது நடப்பது வழக்கம். இந்த விளையாட்டுகளில் தற்போது ஜல்லிக்கட்டு, உரி அடித்தல் மிகவும் பிரபலமாக நடைபெற்று வந்தாலும் மற்ற விளையாட்டுகளும் மீண்டும் பிரபலம் அடைய ஆரம்பித்துள்ளன. இந்த விளையாட்டுகள் அனைத்தும் அழிந்து விடாமல் போற்றி பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.

மேலும் படிக்க: ‘பொங்கல் டெஸ்ட்’ – 61 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய வரலாற்று சிறப்பு நிகழ்வு!