ஐஎஸ்எல் 2020-21: சென்னை அணி வெற்றி; அனிருத் தாபா சாதனை படைத்தார்

Update: 2020-11-25 02:58 GMT

கோவாவில் நடைபெற்று வரும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது சென்னையின் எப் சி அணி. ஜாம்ஷெட்பூர் எப் சி அணிக்கெதிரான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் சிறப்பான வெற்றியைப் பெற்றது. தமிழக வீரர் எட்வின் அணியில் இல்லாத சோகம் ரசிகர்களின் வெகு விரைவில் மறந்தது. காரணம், ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே அற்புதமான கோல் அடித்து அசத்தினார் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான அனிருத் தாபா.

இதன் மூலம் இந்த சீசனில் கோல் அடித்த முதல் இந்தியர் மற்றும் ஐஎஸ்எல் வரலாற்றில் சென்னையின் அணிக்காக வேகமாக கோல் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்தார். எதிர்பார்த்தது போலவே இந்த கோல் உருவாக காரணமாக இருந்தவர் அணியின் கேப்டன் ரஃபேல் கிரிவெல்லாரோ. முதல் கோல் அடித்த உற்சாகத்தில் தொடர்ந்து அதிரடியாக ஆடினர் சென்னை வீரர்கள். அதற்கு பலனாக கிடைத்த பெனால்டி வாய்ப்பினை பயன்படுத்தி இரண்டாவது கோல் அடித்தார் இஸ்மா.

ஸ்தம்பித்து இருந்த ஜாம்ஷெட்பூர் அணிக்கு ஒரு கோல் அடித்து நம்பிக்கை அளித்தார் சென்னையின் எப் சி முன்னாள் வீரர் வால்ஸ்கிஸ். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க முடியாததால் சென்னையின் எப் சி அணி வெற்றி பெற்றது. இன்னும் சரிசெய்யப்பட வேண்டிய விஷயங்கள் இருந்தாலும் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக அணியின் பயிற்சியாளர் ஸாபா லாஸ்லோ கூறியுள்ளார். இளம் வீரர்களான தீபக் டாங்கிரி மற்றும் ரஹீம் அலி ஆகியோர் கிடைத்த வாய்ப்புகளை வீணடிக்காமல் சிறப்பாக விளையாடியது கூடுதல் சிறப்பு.

2014ஆம் ஆண்டுக்கு பின் தற்போது தான் தங்களது முதல் ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெறுகிறது. அந்த சீசனை போல இம்முறையும் சென்னையின் எப் சி அணி சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்துமான எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் படிக்க: இலங்கை டி20 லீக் தொடரில் பங்கேற்கும் 4 இந்திய வீரர்கள் யார் தெரியுமா?