ஐபிஎல் வீரர்கள் பிராண்ட் வேல்யூவில் கோலியை பின்னுக்கு தள்ளிய தோனி!

Update: 2020-10-13 03:57 GMT

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இம்முறை ஐபிஎல் போட்டிகள் யுஏஇயில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நடப்புத் தொடரில் மூன்று முறை சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சற்று தடுமாறி வருகிறது. எனினும் சென்னையின் கேப்டன் தோனி மீது ரசிகர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அவர் அணியில் புதிய உக்தியை கையாண்டு மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்வார் என்று ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் தொடர்பான பிராண்ட் வேல்யூ ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தற்போதைய இந்திய கேப்டன் விராட் கோலியை பின்னக்கு தள்ளி தோனி முதலிடத்தில் உள்ளார். இது தொடர்பாக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹூமன் பிராண்ட்ஸ் என்ற நிறுவனம் ஒரு ஆய்வை நடத்தியது.

அதன்படி 82 புள்ளிகளுடன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலிடம் பிடித்தார். இவரை தொடர்ந்து 69 புள்ளிகளுடன் விராட் கோலி இரண்டாவது இடத்தை பிடித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். மேலும் அவர் கடந்த ஒராண்டாக இந்திய அணியில் விளையாடவில்லை.

எனினும் தற்போதைய கேப்டன் விராட் கோலியை பிராண்ட் வேல்யூவில் தோனி பின்னுக்கு தள்ளி அசத்தியுள்ளார். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி சரியாக விளையாடவில்லை என்றாலும் தோனிக்கு ஆதரவு குறையவில்லை எனத் தெரிகிறது.

ஏற்கெனவே ஐபிஎல் தொடர் மூலம் அதிக வருமானம் ஈட்டும் வீரர்கள் பட்டியலிலும் தோனி முதலிடம் பிடித்து அசத்தினார். அந்தப் பட்டியலில் விராட் கோலி மூன்றாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ஐபிஎல் சம்பளத்தில் ‘நூறு கோடி’யை தொட்ட மூன்று வீரர்கள் யார் தெரியுமா?