ஐபிஎல் ஏலத்தில் ஷாரூக் கான், அருண் கார்த்திக் உள்ளிட்ட 8 தமிழக வீரர்கள்!

Update: 2021-02-12 11:09 GMT

2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு முன்பாக வரும் 18ஆம் தேதி சென்னையில் வீரர்களின் ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு 292 வீரர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹர்பஜன் சிங்,ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல் கேதார் ஜாதவ்,ஶ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல இந்த ஏலத்திற்கான வீரர்கள் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். ஹரி நிஷாந்த், பாபா அப்ரஜித், ஷாரூக் கான், அருண் கார்த்திக், சோனு யாதவ், பெரியசாமி, மணிமாறன் சித்தார்த், முகமது ஆகியோர் வீரர்கள் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் குறைந்தபட்ச தொகையான 20 லட்ச ரூபாய்க்கான வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதே பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் இடம்பெற்றுள்ளார்.

இந்த ஏலத்தில் 8 அணிகளுக்கும் சேர்த்து 61 வீரர்கள் எடுக்கும் வாய்ப்பு உள்ளது. இதில் அதிகபட்சமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 வீரர்களை எடுக்கும் வாய்ப்பு உள்ளது. குறைவாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 3 வீரர்களை எடுக்கும் வாய்ப்பு மட்டுமே உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொருத்தவரை 19.9 கோடி ரூபாய் வரை செலவு செய்ய முடியும். அத்துடன் சென்னை அணி 6 வீரர்கள் வரை எடுக்க முடியும் என்பதால் அந்த அணி யாரை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்தியா என்ன செய்ய வேண்டும்?