ஐபிஎல்: தோனி விக்கெட்டை எடுத்து தனது கனவை நினைவாக்கிய நடராஜனை பாராட்டிய அஸ்வின்

Update: 2020-10-14 03:48 GMT

12ஆவது ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் சார்பில் விளையாடிய தமிழக வீரர் நடராஜன் தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றியுள்ளார்.

அதாவது நேற்றைய போட்டியில் நடராஜன் ஆட்டத்தின் 19ஆவது ஓவரை வீசினார். அந்த ஓவரின் கடைசிப் பந்தில் நடராஜன் சென்னை கேப்டன் தோனியை ஆட்டமிழக்க செய்தார். இதன்மூலம் அவர் தனது நீண்ட நாள் ஆசையான தோனியின் விக்கெட்டை எடுத்தார்.

முன்னதாக நடராஜன் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுடன் ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அதில், அஸ்வின் தனது கனவு விக்கெட் யார் என்று நடராஜனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு நடராஜன் தனது கனவு விக்கெட் தோனி தான் என்று பதிலளித்திருந்தார். நடராஜனின் கனவு நேற்று நிறைவேறியது.

இதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தை தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், “ சிறப்பாக பந்துவீசியதற்கு வாழ்த்துகள் நடராஜன். இது உனக்கு ஒரு மிகவும் பெருமையான தருணம்” எனக் கூறியுள்ளார். அத்துடன் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக கலக்கி வரும் சேலத்தைச் சேர்ந்த நடராஜன் இதுவரை 9 விக்கெட்களை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: “ஜெயித்தாலும் தோற்றாலும் எப்போதும் தோனி ரசிகர்”- வீட்டிற்கு மஞ்சள் நிறம் அடித்த சிஎஸ்கே ஃபேன்