சிட்னி டெஸ்டில் விஹாரியுடன் தமிழிலும், பெயினுடன் ஆங்கிலத்திலும் உரையாடி அசத்திய அஸ்வின்!

Update: 2021-01-11 08:43 GMT

ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான நான்கவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் ஐந்தாவது நாளான இன்று ஆட்டம் பெரும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி நாள் முழுவதும் பேட்டிங் செய்து போட்டியை டிரா செய்து அசத்தியது.

குறிப்பாக தேநீர் இடைவேளைக்கு பிறகு இந்தியாவின் விஹாரி-அஸ்வின் ஜோடி கவனமும் நிதானமும் நிறைந்த சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இன்றைய ஆட்டத்தின் போது விஹாரிக்கு தசைப்பிடிப்பு காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் போட்டியில் ஓட முடியவில்லை. இந்தக் காயத்தையும் பொருட் படுத்தாது இவர் நிதானமாக விளையாடி அசத்தினார்.

இந்த ஜோடி களத்தில் பேட்டிங் செய்த போது இவர்கள் இருவரும் தங்களது உரையாடல்களை தமிழில் மேற்கொண்டனர். இதில் அஸ்வின் விஹாரியிடம்,”பந்து உள்ளே வராது வெளியே தான் செல்லும் நீ விளையாடு மாமா” எனக் கூறினார். மேலும் அவர் ஒரு கட்டத்தில் விஹாரி சற்று கவனத்தை இழக்க தொடங்கிய போது, “பத்து பத்து பந்துகளாக நினைத்து விளையாடு உன்னால் எளிதில் முடியும்” என நம்பிக்கை அளிக்கும் வகையில் தெரிவித்தார்.

அதேபோல ஆட்டத்தின் இறுதிக் கட்டத்திலும் அஸ்வின் விஹாரியிடம், “உன்னால் ஓட முடிந்தால் ஓடு இல்லை என்றால் நின்று விளையாடு” என்றும் கூறினார். இந்த உரையாடல்கள் அனைத்தும் ஸ்டெம்ப் மைக் மூலமாக வெளியே கேட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முரளி விஜய் மற்றும் கே.எல்.ராகுல் தமிழில் பேசியது ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது இவர்கள் இருவரும் தமிழில் பேசியது ரசிகர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைப் பலர் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதேபோல ஆட்டத்தின் நடுவில் லையான் பந்துவீச்சின் போது ஆஸ்திரேலிய கேப்டன் பெயின் அஸ்வினுடன் உரையாடினார். அப்போது அவருக்கு லாவகமாக ஆங்கிலத்தில் அஸ்வின் பதிலடி கொடுத்தார். இந்த உரையாடலை வர்ணனையாளர்களும் பெரிதும் பாராட்டினர்.

இப்படி தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசி கலக்கிய அஸ்வின் தனது பேட்டிங் மூலம் இந்திய அணி போட்டியை டிரா செய்ய முக்கிய காரணமாக விளங்கினார். இவரை பலரும் ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க: சிட்னி டெஸ்டின் போது சிராஜை குரங்கு,நாய் என்று ரசிகர்கள் திட்டியதாக இந்திய அணி புகார்!