உலகக் கோப்பை குத்துச்சண்டையில் 3 தங்கப்பதக்கங்களை வென்று இந்திய வீரர் வீராங்கனைகள் அசத்தல்!

Update: 2020-12-20 06:26 GMT

ஜெர்மனியின் கொலோன் நகரில் குத்துச்சண்டை உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் ஜெர்மனி, இந்தியா, பெல்ஜியம், பிரான்சு, நெதர்லாந்து, போலாந்து, உக்ரேன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியா சார்பில் 5 வீராங்கனைகள் மற்றும் 8 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 52கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்று இருந்தார். இறுதிப் போட்டியில் அவரை எதிர்த்து விளையாட இருந்த ஜெர்மனி வீரர் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். இதனால் அமித் பங்கால் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கு தங்கப் பதக்கம் அளிக்கப்பட்டது.

இதேபோல 91கிலோ எடைப்பிரிவிற்கு மேற்பட்டவர்களுக்கான போட்டியில் இந்திய வீரர் சதிஷ் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்று இருந்தார். எனினும் அரையிறுதிப் போட்டியில் இவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் காயம் காரணமாக இறுதிப் போட்டியிலிருந்து இவர் விலகினார். எனவே அவருக்கு வெள்ளிப்பதக்கம் அளிக்கப்பட்டது.

மகளிர் பிரிவில் 57 கிலோ எடைப்பிரிவில் போட்டியில் இந்தியாவின் சாக்‌ஷி மற்றும் மனிஷா ஆகியோர் தகுதிப் பெற்றனர். அரையிறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மனிஷா ஜெர்மனி வீராங்கனையை வீழ்த்தி அசத்தினார். இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சாக்‌ஷியை வீழ்த்தி மனிஷா தங்கப்பதக்கம் வென்றார்.

மேலும் மகளிர் 60 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சிம்ரன்ஜீத் கவுர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இவர்கள் தவிர பூஜா ராணி அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் வென்றார். அதேபோல ஹம்ஸூதின் மற்றும் கௌரவ் சொலான்கி ஆகியோரும் வெண்கலப் பதக்கம் வென்றனர். மகளிர் 57கிலோ எடைப்பிரிவில் மற்றோரு இந்திய வீராங்கனை சோனியா லாத்தர் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதனைத் தொடர்ந்து உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 3 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் இந்திய வீரர் வீராங்கனைகளின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க: கொரோனா காலத்திலும் கொண்டாட வைத்த 5 விளையாட்டு தருணங்கள்!