மகளிர் டி20 உலகக் கோப்பை: 2011ல் தோனி செய்ததை 2020ல் ஹர்மன்பிரீத் செய்வாரா?

Update: 2020-03-06 16:47 GMT

மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் வரும் ஞாயிற்றுகிழமை மோதவுள்ளன. மெல்பெர்ன் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியை வழிநடத்தும் போதே ஹர்மன்பிரீத் பெரிய சாதனையை படைக்க உள்ளார்.

அதாவது மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வழிநடத்திய முதல் கேப்டன் என்ற சாதனையை ஹர்மன்பிரீத் படைக்கவுள்ளார். ஏனென்றால் இந்திய மகளிர் அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. இதற்கு முன்பு இந்திய மகளிர் அணி மூன்று முறை அரையிறுதியில் தோல்வி அடைந்துள்ளது.

அத்துடன் வரும் ஞாயிற்றுகிழமை இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தனது 32ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதன்மூலம் அவர் மற்றொரு சாதனையையும் படைக்க உள்ளார். அதாவது தனது பிறந்தநாளில் ஐசிசி தொடரின் இறுதிப் போட்டியில் அணியை வழிநடத்திய முதல் கேப்டன் என்ற சாதனையை படைக்க உள்ளார். இதற்கு முன்பு எந்த வீரர் மற்றும் வீராங்கனை தங்களது பிறந்தநாள் அன்று ஐசிசி தொடரின் இறுதிப் போட்டியில் அணியை வழிநடத்தியதில்லை.

ஹர்மன்பிரீத் கவுர் நடப்பு உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடவில்லை. லீக் போட்டியில் விளையாடிய நான்கில் அவர் ஒரு முறை மட்டுமே இரட்டை இலக்க ஸ்கோரை அடித்தார். மேலும் இந்த உலகக் கோப்பை தொடரில் ஷாபாலி வர்மா மீதே அதிக வெளிச்சம் பட்டுள்ளது. இதனால் ஹர்மன்பிரீத் மீது பெரிதாக யாரும் அதிக கவனம் செலுத்தவில்லை.

2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் 50ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி அரையிறுதி வரை அனைத்து போட்டிகளிலும் சரியாக விளையாடவில்லை. ஆனால், இறுதிப் போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய தோனி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணிக்கு உலகக் கோப்பையை பெற்று தந்தார்.

அதேபோல நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஹர்மன்பிரீத் வரும் ஞாயிற்றுகிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு முதல் டி20 உலகக் கோப்பையை பெற்று தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்மன்பிரீத் கவுர் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை முதல் தற்போதைய தொடர் வரை அனைத்திலும் விளையாடி உள்ளார். எனவே 2009ஆம் ஆண்டு முதல் அவர் துரத்தி வரும் கனவு 2020ஆம் ஆண்டு கைகூடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.