பிரிஸ்பேனில் 2003ல் ஆஸி.யை வெளுத்து வாங்கிய கங்குலியை போல் நாளை யார் செய்வார்?

Update: 2021-01-16 10:50 GMT

ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்துள்ளது.

பிரிஸ்பேன் மைதானம் எப்போதும் ஆஸ்திரேலிய அணியின் கோட்டையாக இருந்துள்ளது. இந்த மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்ததே இல்லை. எனவே தற்போது நடைபெறும் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் செய்தால் மட்டுமே இந்தப் போட்டியில் வெல்ல முடியும். அத்துடன் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் சற்று உயரமானவர்கள் என்பதால் அவர்களுக்கு மைதானத்திலிருந்து அதிக பவுன்ஸ் கிடைக்கும்.

இதனால் இந்திய தனது சிறப்பான பேட்டிங்கை நாளை வெளிப்படுத்தவேண்டும். இந்தச் சூழலில் இதற்கு முன்பாக இந்திய அணி பிரிஸ்பேனில் ஒரு டெஸ்டில் சிறப்பாக விளையாடியது. 2003ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி போட்டியை டிரா செய்தது. அந்தப் போட்டிக்கு இந்தப் போட்டிக்கும் என்ன சம்பந்தம் என்று தானா யோசிக்கிறீர்கள்? ஒரு சம்பந்தம் உள்ளது.

அதாவது அந்தப் போட்டியிலும் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 323 ரன்கள் விளாசியது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலியின் அதிரடியான சதத்தால் 409 ரன்கள் எடுத்து அசத்தியது. கங்குலியின் இந்த ஆட்டம் தொடர்பாக சமீப்பத்தில் ஸ்டீவ் வாக் கருத்து தெரிவித்துள்ளார்.

Full View

அதில், "கங்குலி ஒரு சிறப்பான ஆஃப் சைடு வீரர். 2003ல் பிரிஸ்பேன் போட்டியில் பவுன்ஸ் நிறைந்த ஆடுகளத்தில் நாங்கள் தான் இந்தியாவை பந்தாடுவோம் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு மாறாக கங்குலி தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் எங்களை அதிரவைத்தார். அவர் தனது ஆட்டத்தின் மூலம் மற்ற வீரர்களையும் சிறப்பாக விளையாட செய்தார்"எனத் தெரிவித்துள்ளார்.

பிரிஸ்பேன் டெஸ்டில் நாளை இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்தால் மட்டுமே இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்ற முடியும். எனவே இந்திய அணியில் கங்குலியை போல் நாளை யார் பேட்டிங் செய்து ஆஸ்திரேலிய பந்துவீச்சை திணறடிப்பார் என்பதை நாம் பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.

மேலும் படிக்க: ஏன்? எதற்கு?- ட்விட்டரில் ரோகித் சர்மாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள் !