ஆசிய மல்யுத்தம்: 27ஆண்டுகளுக்குப் பிறகு கிரேக்க ரோமன் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம்

Update: 2020-02-19 02:00 GMT

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லியில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா சார்பில் 30 பேர் கலந்து கொண்டுள்ளனர். நேற்று நடைபெற்ற முதல் நாளில் கிரேக்க ரோமன் பிரிவு மல்யுத்த போட்டிகள் நடைபெற்றன.

இதில் ஆடவர் பிரிவின் 87 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சுனில் குமார் தங்கப்பதக்கத்தை வென்று சாதனைப் படைத்தார். இவர் இறுதிப் போட்டியில் கிரிகிஸ்தான் நாட்டின் அசாத் சலிட்னோவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார். முன்னதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இவர் கஜகிஸ்தானின் அசமத் குஸ்மதுவோவை சந்தித்தார். அதில் 1-8 என பின் தங்கி இருந்த சுனில் குமார், இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை 12-8 என்ற கணக்கில் வென்றார்.

தங்கப் பதக்கம் வென்ற சுனில் குமார்,"இந்தியாவிற்காக இம்முறை முதல் தங்கப் பதக்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. இத்தொடருக்கு முன்பாக என்னுடைய மல்யுத்த ஆட்டத்தில் சிறிய திருத்தங்களை மேற்கொண்டு வந்தேன். அத்துடன் தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டேன். கடந்த ஆண்டைவிட இம்முறை நான் சிறப்பாக செயல்பட்டேன்" எனத் தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் சுனில் குமார் வெள்ளிப் பதக்கம் வென்று இருந்தார்.

மேலும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கிரேக்க ரோமன் பிரிவில் 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா பெரும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். இதற்கு முன்பு 1993ஆம் ஆண்டு கிரேக்க ரோமன் பிரிவில் பப்பு யாதவ் தங்கப் பதக்கம் வென்று இருந்தார். அதன்பின்னர் நடைபெற்ற போட்டிகளில் இந்திய வீரர்கள் அதிகபட்சமாக வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்றனர்.

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாளில் இந்தியாவிற்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம் கிடைத்துள்ளது. கிரேக்க ரோமன் பிரிவில் 55 கிலே எடை போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் ஹாலாகுர்கி வெண்கலப் பதக்கத்தை வென்றார். மற்ற வீரர்களான சஜன், சச்சின் ரானா மற்றும் மெஹர் சிங் தங்களது போட்டியில் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தனர். மெஹர் சிங் மட்டும் 130 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்க போட்டியில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.