ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: 20 பதக்கங்களுடன் 3ஆம் இடம் பிடித்து இந்திய அணி அசத்தல்

Update: 2020-02-24 01:21 GMT

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லியில் கடந்த 18ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்திய அணியின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி நாளான நேற்று ஆடவர் பிரிவு போட்டிகள் நடைபெற்றன.

இதில் 74 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஜித்தேந்தர் கஜகிஸ்தானின் டனியர் கசோனோவை எதிர்கொண்டார். இப்போட்டியில் 1-3 என்ற கணக்கில் ஜித்தேந்தர் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஜித்தேந்தர்

86கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா ஈரானின் அபுசலாம் அல் ஓபேதியை எதிர்த்து களமிறங்கினார். இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட தீபக் புனியா 10-0 என்ற கணக்கில் அபுசலாமை தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

மேலும் 61 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ராகுல் அவாரே வெண்கலப் பதக்க போட்டியில் ஈரானின் மஜீத் தஸ்தானை எதிர்கொண்டார். இதில் 5-2 என்ற கணக்கில் ராகுல் அவாரே வெற்றிப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார். கடைசி நாளில் களமிறங்கிய மற்ற இரண்டு இந்தியர்களான சோம்விர் மற்றும் சத்தேந்தர் காலிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து ஆசிய சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.

தீபக் புனியா

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் கடைசி நாளில் 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணி மொத்தம் 20 பதக்கங்களை பெற்றது. அத்துடன் பதக்கப் பட்டியலில் இந்திய அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தது. எனினும் இந்தத் தொடரில் அதிக பதக்கம் வென்ற அணியாக இந்திய அணியே இருந்தது. முதலிடத்தை பிடித்த ஜப்பான் அணி 8 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 16 பதக்கங்களை வென்றது.

இந்திய அணி கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் ஒரு தங்கம், 6 வெள்ளி மற்றும் 9 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களை வென்றது. அத்துடன் அப்போது இந்திய அணி 8ஆவது இடத்தை பிடித்தது. இம்முறை சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் இந்திய அணியின் பதக்க எண்ணிக்கையை அதிக படுத்தியுள்ளனர். இந்தத் தொடரில் இந்திய அணி 5 தங்கம்,6 வெள்ளி மற்றும் 9 வெண்கலப் பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.