ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் நேற்று தொடங்கியது. நேற்று ஆஸ்திரேலியாவில் மழை பெய்ததால் சில போட்டிகள் நடைபெறவில்லை. அவை அனைத்து இன்று நடைபெற்று வருகின்றன.
இந்தத் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவிற்கு இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் லக்கி டிரா மூலம் தகுதி பெற்றார். இவர் ஆஸ்திரேலிய ஓபன் தகுதி சுற்றில் தோல்வி அடைந்தவர்களுக்கு நடத்தப்பட்ட லக்கி டிரா மூலம் ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கு தகுதி பெற்றார்.



இந்நிலையில் இவர் தனது முதல் சுற்று ஆட்டத்தில் ஜப்பானின் டட்சுமா இட்டோவை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டில் இரு வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை டட்சுமா இட்டோ கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது செட்டில் ஜப்பான் வீரர் டட்சுமா இட்டோ அதிரடி காட்டினார். அவர் தொடர்ச்சிய 3 கேம்களை வென்று 6-2 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றினார்.
அதன்பின்னர் நடைபெற்ற மூன்றாவடி செட்டில் முதல் மூன்று கேம்களையும் பிரஜ்னேஷ் கைப்பற்றினார். அதன்பின்னர் சுதாரித்து கொண்ட ஜப்பான் வீரர் இட்டோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரு வீரர்களும் தங்களது திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்தனர். இதனால் மூன்றாவது சுற்றும் பெரும் விறுவிறுப்பு அடைந்தது.



இறுதியில் ஜப்பான் வீரர் இட்டோ 7-5 என்ற கணக்கில் மூன்றாவது செட்டை கைப்பற்றினார். இதன்மூலம் 6-4,6-2-7-5 என்ற நேர் செட் கணக்கில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரனை ஜப்பான் வீரர் டட்சுமா இட்டோ வீழ்த்தினார். டட்சுமா இட்டோ டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் 145 இடத்தில் உள்ளார். இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் டென்னிஸ் தரவரிசையில் 122 இடத்தில் உள்ளார்.
அத்துடன் டட்சுமா இட்டோ ஆஸ்திரேலியன் ஓபன் தொடருக்கு வைல்ட் கார்ட் முறை மூலம் தகுதி பெற்று இருந்தார். தன்னைவிட தரவரிசையில் குறைந்து இருக்கும் வீரரிடம் தோல்வி அடைந்து பிரஜ்னேஷ் குணேஸ்வரன் ஆஸ்திரேலியன் ஓபன் தொடரிலிருந்து வெளியேறி உள்ளார்.



இனி ஆஸ்திரேலியன் ஓபன் தொடரில் இந்தியாவின் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா மற்றும் திவிஜ் சரண்ஆகியோர் இரட்டையர் பிரிவில் பங்கேற்க உள்ளனர். ஒற்றையர் பிரிவை பொறுத்தவரை இந்தியாவின் கனவு பிரஜ்னேஷ் தோல்வியுடன் முடிந்து விட்டது. இனி இரட்டையர் பிரிவில் விளையாடும் இந்தியர்களாவது சாதிப்பார்களா என்ற ஏக்கத்துடன் ரசிகர்கள் உள்ளனர்.