அண்மை செய்திகள்
டில்லியில் நடக்கும் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்பது உறுதி
பிப்ரவரி 18 முதல் 23 வரை புதுடில்லியில் நடைபெற இருக்கும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்தது. இந்நிலையில், இப்போது பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்திருந்த
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI), பாகிஸ்தான் அணி
பங்கேற்பதில் எந்த சிக்கலும் இருக்காது என நம்பிக்கை தெரிவித்திருந்தது. அதே
போல பிப்ரவரி மாதம் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் பாகிஸ்தான்
வீரர்கள் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.
பாகிஸ்தான் அணி தரப்பில் பேசிய ஃபரித்
அலி,
“பாகிஸ்தான் வீரர்களின் பாஸ்போர்ட் மற்றும் விசா
விண்ணப்பங்களை இந்திய தூதரகம் ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, நாங்கள் இந்திய மல்யுத்த கூட்டமை அணுகினோம். இப்போது
பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்” என்றார்.
மேலும், “2020 ஒலிம்பிக் தொடர் நெருங்குவதால், ஒவ்வொரு மல்யுத்த வீரருக்கும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பது மிகவும் முக்கியமாகும். இந்த சாம்பியன்ஷிப்பில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்பது இப்போது உறுதியாகியுள்ளது” என தெரிவித்தார்.
முகமது பிலால் (57 கிலோ), அப்துல் ரெஹ்மான் (74 கிலோ), தயாப் ரசா (97 கிலோ), ஜமான் அன்வார் (125 கிலோ) உள்ளிட்ட நான்கு வீரர்களுக்கும், விசா ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, புல்வாமா பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தான்
துப்பாக்கிச் சூடுதல் வீரர்களுக்கு இந்தியா விசா மறுத்தது. இதனால், சர்வதேச போட்டிகளை நடத்த இந்தியாவுக்கு சர்வதேச ஒலிம்பிக்
அமைப்பு தடை விதித்திருந்தது.
பின்னர், இந்திய அரசின்
எழுத்துப்பூர்வ உத்தரவாதத்திற்குப் பிறகுதான் தடை நீக்கப்பட்டது. ஏற்கனவே, 2017 ஆசிய
குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின்போது பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா
மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனினும், 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடந்த ஜூனியர் ஆசிய சாம்பியன்ஷிப்
போட்டிகளில் பாகிஸ்தானைச் சேர்ந்த மல்யுத்த வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.