‘கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2020’ விளையாட்டுப் போட்டிகள் அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்று வருகின்றன. இதில் 17வயதுக்குட்பட்டோருக்கான 64கிலோ பளு தூக்கும் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பூர்ணா ஶ்ரீ தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவர் யார்? இவர் கடந்த வந்த பாதை என்ன?
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூர்ணா ஶ்ரீ. தமிழ்நாட்டில் அதிகப் பளு தூக்கும் வீரர்கள் உருவாகும் மாவட்டம் வேலூர் மாவட்டம். அந்த மாவட்டத்தில் பிறந்தவரான பூர்ணா ஶ்ரீயும் தற்போது பளு தூக்குதல் போட்டியில் அசத்தியுள்ளார்.
பூர்ணாவின் தந்தை பீடி வியாபாரம் செய்து வருகிறார். இதனால் அவரது குடும்பம் மிகவும் வறுமை நிலையில் இருந்தது. இந்தச் சூழலில் பளு தூக்குதல் விளையாட்டில் ஆர்வம் காட்டிய பூர்ணாவிற்குக் ‘கேலோ இந்தியா’ திட்டம் மிகவும் உதவிகரமாக அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் வரும் 30 ஆயிரம் ரூபாய் பணத்தில் தனது பளு தூக்கும் பயிற்சிக்கும் பள்ளிப் படிப்பு செலவிற்கும் பூர்ணா பயன்படுத்தி வருகிறார்.



இதுகுறித்து பூர்ணா, “நான் மிகவும் வறுமையான குடும்பத்திலிருந்து வருகிறேன். என்னுடைய தந்தை பீடி வியாபாரம் மூலம் மாதம் 2000-3000 ரூபாய் சம்பாதித்து வருகிறார். இதனால் நான் உள்ளூரில் பங்கேற்கும் பளு தூக்குதல் போட்டிகளின் வெற்றிப் பணத்தை வைத்துக் குடும்பத்தைச் சற்று நடத்த முடிந்தது.
என்னுடைய தந்தையும் ஒரு பளு தூக்குதல் வீரர் தான். அதனால் தான் எனக்குப் பளு தூக்குதலில் ஆர்வம் வந்தவுடன் அவர் எனக்குச் சில நுட்பங்களைக் கற்றுக் கொடுத்தார். அது எனக்கு மிகவும் உதவிகரமாக அமைந்தது. கேலோ இந்தியா திடத்திற்கு நான் தேர்வானதால் எனக்கு அதிலிருந்து கிடைத்த தொகை மூலம் எனது பயிற்சிக்கு உதவியது. அத்துடன் அந்தத் தொகையில் என்னுடைய பள்ளிக் கட்டணத்தையும் செலுத்த முடிந்தது.



நான் தற்போது இந்திய ஜூனியர் கேம்ப்பில் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். இதுவரை நான் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதனால் இம்முறை நடைபெறும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான தகுதி போட்டியில் நான் சிறப்பாக விளையாடி தகுதி பெறுவேன். சர்வதேச அரங்கில் பல சாதனைகள் புரிந்து இந்தியாவிற்குப் பெருமை தேடி தருவதே என்னுடைய லட்சியம்”எனத் தெரிவித்துள்ளார்.
பூர்ணா ஶ்ரீ கடந்த ஆண்டு சப் ஜூனியர் பிரிவில் நடைபெற்ற தேசிய பளு தூக்குதல் போட்டியில் சாதனை படைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.