சென்னை ஓபன் சர்வதேச செஸ் போட்டிகள் கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் 20 நாடுகளைச் சேர்ந்த 37 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இந்தச் சென்னை ஓபன் செஸ் போட்டியில் முதல்நிலை வீரராக ரஷ்யாவின் கிராண்ட் மாஸ்டர் பவேல் போன்கிராடோவ் உள்ளார். அத்துடன் பெரு நாட்டின் மாா்ட்டினஸ் ஜோஸ் எட்வா்டோ, நடப்ப சாம்பியன் லெவன் பன்சுலயா உள்ளிட்ட வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தியா சார்பில் கிராண்ட் மாஸ்டர்கள் விசாக், வெங்கடேஷ், காா்த்திக் வெங்கட்ராமன், விஷ்ணு பிரசன்னா, வி.சப்தரிஷி ராய், நீலோத்பால் தாஸ், பி.காா்த்திகேயன், சுந்தர்ராஜன் கிடாம்பி உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.



இன்று நடைபெற்ற நான்காவது சுற்றுப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த பள்ளிச் சிறுவன் ஹர்ஷவர்தன் ஜார்ஜியா நாட்டின் கிராண்ட் மாஸ்டர் மிகைல் மிச்செட்லிஷ்விலி(Mikheil Mchedlishvili)யை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஹர்ஷவர்தன் 43ஆவது நகர்த்தலில் மிச்செட்லிஷ்விலியை தோற்கடித்தார்.
சிறுவன் ஹர்ஷவர்தன் 18வயதுக்குட்பட்டோருக்கான சர்வதேச செஸ் தரவரிசையில் 123 இடம் வகித்து வருகிறார். அதேபோல 18 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய வீரர்கள் தரவரிசையில் 13ஆவது இடத்தில் உள்ளார். இந்த வெற்றியின் மூலம் ஹர்ஷவர்தன் 4 புள்ளிகளுடன் முதலிடத்தை 5 வீரர்களுடன் பகிர்ந்துள்ளார்.



4 சுற்றுகளின் முடிவில் ஹர்ஷவர்தன், மாா்ட்டினஸ் ஜோஸ் எட்வா்டோ, ஸ்டானிஸ்லாவ் போக்டனோவிச், முகமது குசென்கோஜேவ், என்.ஆர்.விசாக் மற்றும் சயத்தன் தாஸ் ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர். முதல்நிலை வீரரான ரஷ்யாவின் பவேல் போன்கிராடோவ் 3.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை 20 பேருடன் பகிர்ந்துள்ளார்.
மொத்தம் 10 சுற்றுகள் கொண்ட சென்னை ஓபன் செஸ் தொடர் வரும் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் அனைத்தும் சென்னை சோளிங்கநல்லூரில் நடைபெற்று வருகின்றன. சென்னை ஓபன் தொடரின் மொத்த பரிசுத் தொகை 15 லட்ச ரூபாயாகும். இதில் பட்டம் வெல்பவருக்கு 3 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு கிராண்ட் மாஸ்டரை சென்னையைச் சேர்ந்த 17வயது சிறுவன் தோற்கடித்து மிகவும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.