சேலத்தில் புதிய கிரிக்கெட் மைதானம்: இம்முறை ஐபிஎல் போட்டிகள் சேலத்தில்?

Update: 2020-02-09 06:37 GMT

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள காட்டு வேப்பிலைப்பட்டியில் சேலம் கிரிகெட் பவுண்டேசன் சார்பில் ஒரு புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானம் 16 ஏக்கர் பரப்பளவில் 2 லட்சத்து 5 ஆயிரம் சதுர அடியில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தமிழ்நாட்டு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

முதலமைச்சர் எடப்பாடி உடன் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் பங்கேற்றார். அவரும் குத்து விளக்கு ஏற்றி மைதானத்தில் தொடக்க விழாவில் உரையும் ஆற்றினார். அதில், " அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் சிறிய நகரங்கள், கிராமங்களில் இருந்துதான் வரவுள்ளார்கள். சேலத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், இந்த மைதானத்தில் என்னால் விளையாட முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது" எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிசிசிஐயின் முன்னாள் தலைவர் ஶ்ரீனிவாசன், "சேலத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும். அதில் தோனி விளையாடுவார்" எனத் தெரிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்தவிழாவின் போது புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள மைதானத்தில் ராகுல் டிராவிட் வீசிய பந்தை தமிழ்நாட்டு முதல்வர் பழனிசாமி பேட்டிங் செய்து மகிழ்ந்தார். இதனை அங்கிருந்த அனைவரும் பார்த்து ரசித்தனர். ஏற்கெனவே சென்னை, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட நகரங்களை தொடர்ந்து சேலத்திலும் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விழாவில் தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் தமிழ்நாட்டு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ரூபா குருநாத் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர். இந்தப் புதிய மைதானத்தின் சேலம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு மிகுந்த பயன் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.