2017ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் தனது சிலையை திறந்து வைத்த மரடோனா - வரலாற்று பிளாஷ்பேக்

Update: 2020-11-26 02:20 GMT

2020 - இந்த வருடத்தினை யாரும் அத்துனை எளிதாக மறக்க போவதில்லை. துவக்கத்திலிருந்தே அசௌகரியமான நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக விளையாட்டு உலகின் மாபெரும் ஜாம்பவான்கள் பலர் இந்த வருடம் இறந்தது வருத்தமளிக்கும் ஒன்றாகும். அந்த வகையில் கால்பந்து உலகின் முடிசூடா மன்னனான அர்ஜென்டினாவினை சேர்ந்த டியாகோ மரடோனா உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். உலகம் முழுவதும் உள்ள பல கோடி ரசிகர்கள் இந்த எதிர்பாராத நிகழ்வு மூலமாக மிகுந்த அதிர்ச்சியும் சோகத்திலும் உள்ளார்கள்.

களத்தில் தான் நிகழ்த்திய எண்ணற்ற சாகசங்கள் மூலம் உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர். அதோடு சக வீரர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்தவர். இவரது மறைவு நிச்சயம் ஒர் பேரிழப்பு. இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே ஆட்டத்தில் இரண்டு முற்றிலும் மாறுபட்ட கோல்கள் அடித்து வரலாற்றில் இடம் பிடித்தவர். அதன் மூலம் உலகக்கோப்பை வென்று அர்ஜென்டினா நாட்டில் கடவுளுக்கு நிகராக போற்றப்படுபவர்.

இந்தியாவிலும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம். குறிப்பாக கால்பந்து விளையாட்டினை நேசிக்கும் கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இவரை இன்றளவும் கொண்டாடி வருகின்றனர். இதற்கு உதாரணமாக முதல் முறையாக 2012 ஆண்டு இந்தியா வந்த போது இவரை வரவேற்க கூடிய மக்கள் கூட்டமே சான்றாகும். அதன்பிறகு இதற்கு ஒருபடி மேலே சென்று 2017 ஆண்டு கொல்கத்தாவில் இவருக்கு முழு உருவ சிலை ஒன்று நிறுவப்பட்டது. சிறப்பம்சமாக அந்த சிலையினை தன் கையாலேயே திறந்து வைத்தார் டியாகோ மரடோனா. அப்போது அங்கு நடந்த காட்சி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியுடன் இவர் கால்பந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது. மரடோனாவின் மிகப்பெரிய ரசிகரான கங்குலி இவர் மறைவுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதேபோல் உலகெங்கும் பல விளையாட்டினை சேர்ந்த வீரர்கள் சோகம் தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த உலகினை விட்டு நீங்கினாலும் எப்பொழுதும் கால்பந்து ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பார் டியாகோ அர்மன்டா மரடோனா.

மேலும் படிக்க: ஆஸ்கார் விருதுக்கு ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் பரிந்துரை!