ஐபிஎல்: விராட் கோலியை நிராகரித்த அணி எது தெரியுமா? - ஃபிளாஷ்பேக்

Update: 2020-11-05 09:26 GMT

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 32ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் 12ஆண்டுகளாக ஒரே அணிக்காக விளையாடிய வீரர் விராட் கோலி. இவர் 2008ஆம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்தச் சூழலில் விராட் கோலி எவ்வாறு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம்பிடித்தார் தெரியுமா?

2008ஆம் ஆண்டு இந்திய யு-19 அணி உலகக் கோப்பை தொடரை வென்றது. அந்த அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருந்தார். முதல் ஐபிஎல் தொடரில் யு-19 வீரர்களுக்கான தனி தேர்வு நடைபெற்றது. அப்போது குழுக்கல் முறையில் டெல்லி அணிக்கு முதல் வாய்ப்பு வந்தது. அதனை வைத்து டெல்லி அணி பிரதீப் சங்வான் என்ற வீரரை தனது அணியில் எடுத்தது.

பிரதீப் சங்வான்

டெல்லி அணியை தொடர்ந்து பெங்களூரு அணிக்கு இரண்டாவது வாய்ப்பு வந்தது. அப்போது பெங்களூரு அணி விராட் கோலியை தனது அணியில் எடுத்தது. விராட் கோலியை பெங்களூரு அணி 12 லட்சம் ரூபாய்க்கு அணியில் எடுத்தது. அந்தத் தொடர் முதல் விராட் கோலி பெங்களூரு அணியில் விளையாடி வருகிறார். விராட் கோலி டெல்லியைச் சேர்ந்தவர் என்பதால் அவரை டெல்லி அணி எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அப்போது டெல்லி அணி விராட் கோலியை நிராகரித்து மற்றொரு டெல்லி வீரரான பிரதீப் சங்வானை எடுத்தது.

பிரதீப் சங்வான் முதல் இரண்டு ஐபிஎல் தொடர்களுக்கு மேல் டெல்லி அணியில் விளையாடவில்லை. ஆனால் விராட் கோலி அதன்பிறகு ஐபிஎல் தொடரில் அசைக்க முடியாத பேட்ஸ்மேனாக உருவாகினார். இதுவரை ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கோலி தான் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி ஐபிஎல் தொடரில் இதுவரை 5872 ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: விராட் கோலியின் டாப் 5 சிறந்த ஐபிஎல் தருணங்கள் – பிறந்தநாள் ரீவைண்ட்!