உலக போருக்கு பின்னர் கொரோனாவால் மீண்டும் ஒலிம்பிக்ஸ் திட்டமிட்ட ஆண்டில் நடைபெறாதா?

Update: 2020-03-24 07:05 GMT

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்பின்னர் ஆகஸ்ட் மாதம் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளன. இந்த இரண்டு போட்டிகளும் கொரோனா வைரஸ் பாதிப்பால் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் தொடங்கி தற்போது இந்தியா, அமெரிக்கா,இத்தாலி,ஈரான்,ஸ்பெயின்,ஜெர்மனி உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனால் அந்த நாடுகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது. மேலும் உலகளவில் தற்போது எந்த நாடுகளிலும் விளையாட்டு போட்டிகள் நடைபெறவில்லை.

அதேபோல டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிச் சுற்று போட்டிகளும் தற்போது ரத்தாகியுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பால் விளையாட்டு வீரர்களும் பயிற்சியில் ஈடுபட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்யவேண்டும் அல்லது தள்ளி வைக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி 4 வாரங்களுக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில் நேற்று கனடா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகள் திட்டமிட்டபடி வரும் ஜூலை மாதத்தில் டோக்கியோ ஒலிம்பிக் நடைபெற்றால், தங்களது நாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளன.

அத்துடன் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினரான டிக் பவுண்ட் ஒரு பத்திரிகைக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில், “எனக்கு கிடைத்த தகவல்களின்படி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்கும் முடிவை ஐஓசி எடுத்துள்ளது. இதுகுறித்த தெளிவான அறிவிப்பை வெளியிடவே நான்கு வார அவகாசம் எடுக்கப்பட்டுள்ளது. என்னைப் பொருத்தவரை 2021ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.

டிக் பவுண்ட் கூறியது உண்மையாகும் பட்சத்தில் 124ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்பட உள்ளது. இதற்கு முன்பு 1916ஆம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக்ஸ் முதல் உலக போரால் ரத்து செய்யப்பட்டது. அதேபோல 1940 மற்றும் 1944 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளும் இரண்டாம் உலகப் போரால் ரத்து செய்யப்பட்டது.