டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு மீண்டும்  தொடங்கியது கவுண்டவுன் ! 

Update: 2020-07-23 11:52 GMT

உலகம் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாதிப்பால் மக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளது. இந்தச் சூழல் இந்தாண்டு நடைபெற இருந்த டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டன.

திட்டமிட்டப்படி இந்த ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை நடைபெற இருந்தது. ஆனால் தற்போது டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க சரியாக ஒரு ஆண்டு உள்ளது. இதனை குறிக்கும் வகையில் இன்று ஒரு சிறிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஜப்பானின் டோக்கியோவிலிருக்கும் ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெற்றது.

 

இந்த நிகிழ்ச்சியில் ஜப்பான் நாட்டின் நீச்சல் வீராங்கனை ரிகாகோ இக்கியி ஒலிம்பிக் டார்ச்சின் விளக்கு ஒளியுடன் மைதானத்திற்குள் வந்தார். அத்துடன் அவர் கொரோனா வைரஸ் பாதிப்பில் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் அற்பணிப்பை பற்றி கூறினார். அத்துடன் விளையாட்டு நம் அனைவரையும் ஒன்று சேர்க்கும் எனக் கூறினார். அத்துடன் சிறப்பு வீடியோ ஒன்று திரையிடப்பட்டது.

ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று குறைந்திருந்தாலும் இந்த விழாவிற்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் இந்த நிகழ்வு முழுவதும் இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெற்றாலும் ‘டோக்கியோ 2020’ என்றே அழைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 124ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்பு 1916ஆம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக்ஸ் முதல் உலக போரால் ரத்து செய்யப்பட்டது. அதேபோல 1940 மற்றும் 1944 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளும் இரண்டாம் உலகப் போரால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.