ஐடிஃஎப் ஃஎப்1 ஃபியுச்சர்ஸ் டென்னிஸ் போட்டி: அசத்தி வரும் தமிழக வீரர்கள்

Update: 2020-03-12 15:47 GMT

நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்தியாவில் நடக்கும் ஃபியுச்சர்ஸ் லெவல் டென்னிஸ் போட்டிகள் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். நேற்று நடந்த ஆட்டங்களில் தமிழகத்தை சேர்ந்த மணீஸ் மற்றும் அபினவ் ஆகியோர் தங்களது ஆட்டங்களில் வெற்றுபெற்று அசத்தினர். இன்று தொடங்கிய ஒற்றையர் ஆட்டங்களில் அபினவ் மற்றும் மணீஸ் இருவரும் மோதினார்கள். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய மணீஸ் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதாக வெற்றிபெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். மற்ற ஒற்றையர் ஆட்டங்களில் இந்தியாவினை சேர்ந்த ஆர்யன் கோவியஸ் மற்றும் நிதின் குமார் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர். வளர்ந்து வரும் வீரரான ஃபைசல் குவாமர், தேசிய சாம்பியனான நிக்கி பூனாச்சாவினை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.

அதன்பிறகு நடந்த இரட்டையர் ஆட்டங்களில் நிதின் குமாருடன் இனைந்து களமிறங்கினார் அபினவ் சஞ்சீவ். ஒற்றையர் ஆட்டத்தில் அடைந்த தோல்வியை மறந்துவிட்டு இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினார் அபினவ். இந்த தொடரில் முதல் நிலை வீரர்களான விஷணுவர்தன் மற்றும் அர்ஜுன் காதே ஆகியோரை எதிர்த்து ஆடிய இவர்கள் 6-3, 6-4 என்ற கணக்கில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தனர். மற்றொரு தமிழக வீரரான மணீஸ், வினாயக்குடன் இணைந்து பூனாச்சா மற்றும் அனிருத் ஜோடியை எதிர்த்து ஆடிய இவர்கள் 4-6, 6-4, 7-10 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தனர்.