கொரோனா வைரஸ் பாதிப்பு: விளையாட்டு வீரர்களுக்கு நிதி திரட்டிய சரத் கமல் -சத்யன் 

Update: 2020-07-10 01:31 GMT

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகத்தை மிகவும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் விளையாட்டு துறையிலும் பெரிய அளவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள், விளையாட்டு நடுவர்கள் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.

இவர்களுக்கு உதவும் விதமாக இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்களான சரத் கமல், சத்யன் மற்றும் வீராங்கனை நேஹா அகர்வால் ஆகியோர் நிதி திரட்டினர். இதற்காக ‘our chance to serve’ என்ற வாசகத்தை வைத்து இவர்கள் நிதி திரட்டினர். இந்த முயற்சியில் இவர்கள் கிட்டதட்ட 17 லட்சம் ரூபாய் நிதியை திரட்டியுள்ளனர்.

இந்த நிதி தொகையின் மூலம் ஏறக்குறைய 170 விளையாட்டு வீரர்கள் பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்கள் பலன் அடைவார்கள் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களின் இந்த முயற்சிக்கு 18 மாநிலங்களிலிருந்து 250க்கும் மேற்பட்டோர் உதவியதாக நேஹா அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இவர்களை போல இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் விரன் ரெஸ்கினா ‘LetsStickTogehter’ என்ற முழுகத்துடன் ஹாக்கி தொடர்பான வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நிதி திரட்டினார். அவரது முயற்சியில் 22 லட்ச ரூபாய் நிதி கிடைத்துள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த முயற்சிக்கு நிதி வழங்கியவர்களுக்கு தனது நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார்.