“கொரோனா காலத்தில் பேட்மிண்டன் போட்டிகள் நடுத்துவது சரியானதா?”-சாய்னா நேவால் கேள்வி

Update: 2020-09-13 15:12 GMT

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் விளையாட்டு போட்டிகள் மிகவும் பாதிப்பை சந்தித்தன. தற்போது வைரஸ் பாதிப்பு ஒரு சில நாடுகளில் குறைய தொடங்கியதை அடுத்து மீண்டும் விளையாட்டு போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டு வருகின்றன.

அந்தவகையில் அடுத்த மாதம் சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் ஆரம்பமாக உள்ளன. உபர் கோப்பை மற்றும் தாமஸ் கோப்பை தொடர்கள் அடுத்த மாதம் 3ஆம் தேதி தொடங்க உள்ளன. இந்தப் போட்டிகள் டென்மார்க்கில் நடைபெற உள்ளன.

இந்நிலையில் இந்தத் தொடர் குறித்து இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் சாய்னா நேவால், “கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உபர் மற்றும் தாமஸ் கோப்பை தொடர்களிலிருந்து இதுவரை 7 நாடுகள் விலகியுள்ளன. எனவே இந்த இக்கட்டான கால கட்டத்தில் இந்தத் தொடரை நடுத்துவது சரியானாதா? ” எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக உபர் கோப்பை மற்றும் தாமஸ் கோப்பைக்கான சிறப்பு பயிற்சி முகாமை இந்திய பேட்மிண்டன் சங்கம் ரத்து செய்தது. எனினும் அணியின் வீரர்கள் டென்மார்க்கிற்கு செல்ல முன்னர் ஒன்றாக கூடுவார்கள் எனத் தெரிவிக்கபட்டிருந்தது.

அதேபோல இந்திய பேட்மிண்டனின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து இந்தத் தொடரிலிருந்து முதலில் விலகினார். பின்னர் இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் தலைவர் கேட்டுக் கொண்டதை அடுத்து தொடரில் பங்கேற்க பி.வி.சிந்து சம்மதம் தெரிவித்தார். ஆடவர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரணீத் காயம் காரணமாக இத் தொடரிலிருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தத் தொடர்களிலிருந்து கொரியா,ஆஸ்திரேலியா, ஹாங்காங், சீன தைபே, சிங்கப்பூ,தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா ஆகிய அணிகள் விலகியுள்ளன.

மேலும் படிக்க: “டென்னிஸை மாற்றப்போகும் வரலாற்று வீராங்கனை நயோமி ஒசாகா” – மகேஷ் பூபதி புகழாராம்