'இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி மைதானம் ரூர்கேலாவில் அமைக்கப்படும்'-முதல்வர் பட்னாயக்

Update: 2020-12-25 10:06 GMT

இந்தியாவில் ஹாக்கி விளையாட்டிற்கும் ஒடிசா மாநிலத்திற்கும் நீண்ட தொடர்பு உண்டு. ஏனென்றால் ஒடிசா பகுதியில் வசித்து வந்த பழங்குடியினரின் முக்கிய விளையாட்டு ஹாக்கியாக இருந்தது. இதனால் அப்போது முதல் ஒடிசாவில் ஹாக்கி விளையாட்டு மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது. ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் கலிங்கா ஹாக்கி மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானம் மிகவும் சிறப்பான ஹாக்கி மைதானங்களில் ஒன்று.

இந்நிலையில் ஒடிசாவின் ரூர்கேலா பகுதியின் சுந்தர்கர் என்ற இடத்தில் இந்தியாவின் மிகப் பெரிய ஹாக்கி மைதானம் அமைக்கப்படும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக் தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டு ஒடிசாவில் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை ஒடிசா அரசு மிகுந்த எதிர்பார்ப்புடன் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தத் தொடரை புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடத்த ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளது.

ஏற்கெனவே புவனேஸ்வரில் ஹாக்கி மைதானம் அமைந்துள்ளதால், ரூர்கேலாவில் ஒரு புதிய ஹாக்கி மைதானத்தை உருவாக்க ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளது. ரூர்கேலாவின் சுந்தர்கர் பகுதியில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மைதானம் 20 ஆயிரம் பேர் அமர்ந்து ஹாக்கி போட்டியை நேரில் பார்க்கும் வகையில் கட்டப்பட உள்ளது. இது இந்தியாவிலேயே மிகப் பெரிய ஹாக்கி மைதானமாக ரூர்கேலா மைதானம் அமையும்.

சுந்தர்கர் பகுதியிலிருந்து இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் திலிப் திர்கி, மகளிர் அணியின் அனுபவ வீராங்கனை சுனிதா லாக்ரா ஆகியோர் வந்துள்ளனர். இவர்களை போல் மேலும் பல வீரர் வீராங்கனைகளை இந்திய அணிக்கு அனுப்ப இந்த மைதானம் உதவி செய்யும் என்று ஒடிசா அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஒடிசாவில் ஏற்கெனவே 2018ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்றது. இதில் பெல்ஜியம் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனைத் தொடர்ந்து 2023ஆம் ஆண்டு 15ஆவது உலகக் கோப்பை தொடர் மீண்டும் ஒடிசாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 2020ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பால் ஹாக்கி போட்டிகள் சற்று பாதிக்கப்பட்டன. குறிப்பாக ப்ரோ லீக் ஹாக்கி தொடர் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஆடவர் அணி உலக தரவரிசையில் நான்காவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.

மேலும் படிக்க: உலகக் கோப்பை குத்துச்சண்டையில் 3 தங்கப்பதக்கங்களை வென்று இந்திய வீரர் வீராங்கனைகள் அசத்தல்!