ஷாரூக் கான் அதிரடியில் ஹிமாச்சலை பந்தாடிய தமிழக அணி- யார் இந்த ஷாரூக் கான்?

Update: 2021-01-27 03:43 GMT

சையத் முஸ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்து தற்போது நாக் அவுட் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இத்தொடரின் லீக் சுற்றில் தமிழ்நாடு அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றிப் பெற்று அசத்தியது. இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி ஹிமாச்சலப் பிரதேச அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி பெற முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ஷாரூக் கான். இவர் 19 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உதவியுடன் 40 ரன்கள் சேர்த்து அசத்தினார். இந்தச் சூழலில் யார் இந்த ஷாரூக் கான் எவ்வாறு தமிழ்நாடு அணிக்குள் நுழைந்தார்?

1995ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் ஷாரூக் கான். இவருடைய தாய் மற்றும் அவருடைய சகோதரிகள் நடிகர் ஷாரூக் கானின் தீவிர ரசிகையாக இருந்ததால் இவருக்கு அந்தப் பெயரையே வைத்தனர். பின்னாலில் அதுவே இவரை கிரிக்கெட் போட்டியின் போது கிண்டல் செய்ய மிகவும் ஏதுவாக அமைந்தது. 13 வயதுக்குட்பட்டோருக்கான தமிழ்நாடு அணியில் முதல் முறையாக ஷாரூக் கான் இடம்பெற்றார். அதில் சிறப்பாக விளையாடி வந்த ஷாரூக் கான் 2013ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான கூச் பிஹார் தொடரில் தமிழ்நாடு சார்பில் களமிறங்கினார்.

இந்தத் தொடரில் 6 போட்டிகளில் 624 ரன்கள் அடித்து ரன் மழை பொழிந்தார். அத்துடன் 18 விக்கெட்களையும் வீழ்த்தி ஒரு ஆல்ரவுண்டராகவும் இவர் பிரகாசித்தார். எனினும் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற யு-19 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மிகவும் மனம் உடைந்த ஷாரூக் கான் சற்று வருத்தத்தில் இருந்தார். எனினும் தமிழ்நாடு அணி சார்பாக விஜய் ஹாசரே தொடரில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அத்துடன் தமிழ்நாடு டி20 அணியிலும் இவர் இடம்பிடித்தார்.

தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரிலும் களமிறங்கிய ஷாரூக் முதல் சீசனில் சரியாக விளையாடவில்லை.இரண்டாவது சீசனில் அசத்திய ஷாரூக் கான் 325 ரன்கள் அடித்து மீண்டும் தமிழ்நாடு அணியில் இடம்பிடித்தார். இவரின் அதிரடி ஆட்டம் டி20 போட்டிகளுக்கு ஏதுவாக இருக்கும். இதனால் வரும் ஐபிஎல் தொடர் ஏலத்தில் இவர் எதாவது ஒரு அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: ’25 ஆண்டுகளுக்கு முன்பாகவே விருது கிடைத்திருக்கவேண்டும்’- தனது பயிற்சியாளரின் பத்மஶ்ரீ விருது குறித்து பி.டி.உஷா