ஐடிடிஎஃப் கத்தார் ஓபன் டேபிள் டென்னிஸ்: சத்யன் உள்ளிட்ட இந்திய வீரர்கள் சாதிப்பார்களா?

Update: 2020-03-02 14:28 GMT

ஐடிடிஎஃப் கத்தார் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டிகள் வரும் 5ஆம் தேதி முதல் கத்தாரில் தொடங்கி நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் இந்திய வீரர்கள் சத்யன்,அமல்ராஜ், ஹர்மித் தேசாய், ஜீத் சந்திரா, சுஷ்மித் ஶ்ரீராம் உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்.

அதேபோல மகளிர் பிரிவு போட்டிகளில் சுடிர்தா முகர்ஜி, மாதூரி பட்கர், ஶ்ரீஜா அகுலா மற்றும் கிருத்திகா ராய் உள்ளிட்ட வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். ஆண்கள் பிரிவில் முன்னணி வீரரான சரத் கமல் மற்றும் பெண்கள் பிரிவில் முன்னணி வீராங்கனை மோனிகா பட்ரா ஆகியோர் இத் தொடரில் பங்கேற்கவில்லை.

இதனால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு அனுபவ வீரரான தமிழகத்தின் சத்யனின் ஆட்டத்தை பொறுத்தே அமைந்துள்ளது. உலக டேபிள் டென்னிஸ் வீரர்கள் தரவரிசையில் சத்யன் தான் முதலில் வரும் இந்தியர் என்பதாலும் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சரத் கமல்- மோனிகா பட்ரா

அத்துடன் சத்யன் மற்றும் சரத் கமல் கடந்த வாரம் நடைபெற்ற ஹங்கேரியன் ஓபன் டேபிள் டென்னிஸில் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றனர். இதனால் சத்யன் ஒரு சிறப்பான ஃபார்மில் உள்ளதால் அவர் மீது அதிக நம்பிக்கை எழுந்துள்ளது.

மேலும் கத்தார் ஓபன் தொடர் ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் போட்டிகளுக்கு தகுதிப் பெறும் வாய்ப்பை தருகிறது. இந்தத் தொடரில் சரத் கமல் மற்றும் மோனிகா பட்ரா ஆகியோர் இடம்பெறவில்லை என்பதால் அவர்கள் இந்த வாய்ப்பை இழந்துள்ளனர். சரத் கமல் இல்லாததால் சத்யன் மற்றொரு தமிழக வீரரான அமல்ராஜ் உடன் ஜோடி சேர்ந்து இரட்டையர் பிரிவில் களமிறங்க உள்ளார்.

அதேபோல கலப்பு இரட்டையர் பிரிவில் சுடிர்தா முகர்ஜி மற்றும் ஹர்மித் தேசாய் ஜோடி சேர்ந்து களமிறங்க உள்ளனர். மகளிர் இரட்டையர் பிரிவில் பட்கர் மற்றும் ஶ்ரீஜா அகுலா ஜோடி சேர்ந்து களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இத் தொடர் வரும் 5ஆம் தேதி தொடங்கி 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தொடரின் அனைத்து போட்டிகளும் ஐடிடிஎஃப் இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.