கத்தார் ஓபன்: முதல் சுற்றில் தோல்வி அடைந்து சானியா மிர்சா ஏமாற்றம்

Update: 2020-02-25 13:36 GMT

கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டிகள் தோஹாவில் கடந்த 23ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அனுபவ வீராங்கனை சானியா மிர்சா பங்கேற்றார். இவர் இத் தொடரில் காரோலின் கார்சியாவுடன் ஜோடி சேர்ந்து இரட்டையர் பிரிவில் களமிறங்கினார்.

சானியா-கார்சியா ஜோடிக்கு வைல்ட் கார்டு முறையில் தகுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் முதல் சுற்றுப் போட்டியில் சானியா-கார்சியா ஜோடி காக்லா-லாரா சேக்மண்ட் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டில் சானியா-கார்சியா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்தனர். எனினும் முதல் செட்டின் 8ஆவது கேமை காக்ரா-லாரா ஜோடி சென்று வென்றனர்.

அதன்பின்னர் காக்ரா-லாரா ஜோடி முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வென்றனர். பின்னர் இரண்டாவது செட்டில் முதல் மூன்று கேம்களை சானியா ஜோடி வென்று அசத்தியது. எனினும் இதன்பின்னர் சுதாரித்து கொண்ட காக்ரா-லாரா ஜோடி 6-5 என முன்னிலை பெற்றனர். இறுதியில் கடைசி கேம்மில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காக்ரா-லாரா ஜோடி 7-5 என்ற கணக்கில் செட்டை வென்றனர். அத்துடன் 6-4,7-5 என்ற கணக்கில் போட்டியையும் வென்றனர்.

காயம் மற்றும் மகப்பேறு ஓய்விற்கு சானியா மிர்சா பங்கேற்கும் 4ஆவது டென்னிஸ் தொடர் இதுவாகும். முதலாக களமிறங்கிய ஹோபார்ட் ஓபன் தொடரில் சானியா மிர்சா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். அதன்பின்பு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் போட்டியிலேயே காயம் காரணமாக விலகினார்.

பின்னர் துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார். தற்போது மீண்டும் கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரிலும் முதல் சுற்றில் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் இரட்டையர் பிரிவிற்கு தகுதி பெறும் முனைப்பிலுள்ள சானியா மிர்சாவிற்கு இது பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.

எனவே இனி வரும் டென்னிஸ் தொடர்களில் சானியா மிர்சா சிறப்பாக செயல்பட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே அவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.