‘வடசென்னையும் குத்துச்சண்டையும்’- பா.ரஞ்சித்,ஆர்யா கூட்டணியில் ‘சார்பட்டா பரம்பரை’!

Update: 2020-12-02 06:48 GMT

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பா.ரஞ்சித் ஆவார். இவர் தனது அடுத்தப் படத்தை நடிகர் ஆர்யாவை வைத்து எடுக்கவிருப்பதாக தகவல் வெளியாகி வந்தன. இந்நிலையில் ரஞ்சித்-ஆர்யா கூட்டணியின் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

இந்தப் படத்திற்கு ‘சார்பட்டா பரம்பரை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை கே9 ஸ்டியோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். மேலும் இப்படத்தில் கலையரசுன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடசென்னை பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பாக குத்துச் சண்டை விளையாட்டு தீவிரமாக இருந்தது. அப்போது அங்கு பல குத்துச் சண்டை கிளப்கள் இருந்தன. அதனை குறிக்கும் வகையில் இந்தப் படம் அமைக்கப்பட்டுள்ளது எனப் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு சில வாசகங்களை பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். அதில், “இங்க வாய்ப்பு ‘ன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல,,இது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்..ஏறி ஆடு..கபிலா #சார்பட்டா” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆர்யா குத்துச் சண்டை வீரராக களத்தில் உள்ள படம் இடம்பெற்றுள்ளது. 2012ஆம் ஆண்டு அட்டக்கத்தி மூலம் பிரபலம் அடைந்த பா.ரஞ்சித், பின்னர் ‘மெட்ராஸ்’ மூலம் வடசென்னை வாழ்க்கையை படமாக்கினார். இதன்மூலம் பிரபலம் அடைந்த பா.ரஞ்சித் தற்போது மீண்டும் வடசென்னை தொடர்பாக படத்தை எடுக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இது சினிமா ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: இந்திய ஜெர்ஸியில் முதல் போட்டியில் களமிறங்கும் யார்க்கர் நடராஜன்!