“என்னுடைய முதல் ஸ்பான்சர் அவர் தான்”- எஸ்பிபிக்கு விஸ்வநாதன் ஆனந்த் இரங்கல்

Update: 2020-09-25 08:55 GMT

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மதியம் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி எஸ்.பி.பாலசுப்ரமணியம் உயிரிழந்தார். அவருடைய மரணத்திற்கு பலரும் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் உலக செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், “ஒரு சிறப்பான மனிதரின் மறைவு செய்தியை கேட்டு நான் மிகவும் வருத்ததில் உள்ளேன். என்னுடைய முதல் ஸ்பான்சர் எஸ்பிபி சார் தான். 1983ஆம் ஆண்டு சென்னை கால்ட்ஸ் அணிக்கு அவர் ஸ்பான்சர் செய்தார். என்னுடைய வாழ்வில் நான் சந்தித்த மிகவும் அருமையான மனிதர் அவர். அவருடைய இசை எப்போதும் ஆனந்தத்தை தந்தது. அவரது அத்மா சாந்தி அடைய வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

1982-83 ஆம் ஆண்டு விஸ்வநாதன் ஆனந்த் செஸ் விளையாட்டில் தடம் பதிக்க தொடங்கினார். அப்போது மெட்ராஸ் மாவட்ட செஸ் சங்கம் சார்பாக இந்த இளம் வீரர்களை தேசிய குழு செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டது. அந்த சமயத்தில் செஸ் சங்கத்திற்கு தேவையான நிதி இல்லாமல் இருந்தது.

இந்தச் சூழலில் அப்போதைய சங்க தலைவர் ஆருத்ரா பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்திடம் உதவி கேட்டார். அதற்கு எஸ்பிபி நிதியுதவி வழங்கினார். அந்த உதவியுடன் களமிறங்கிய மெட்ராஸ் அணியில் விஸ்வநாதன் ஆனந்த சிறப்பாக விளையாடினார். சிறந்த வீரர் விருதையும் வென்றார். அத்துடன் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பையும் அவர் பெற்றார். இவ்வாறு சினிமா தவிர விளையாட்டு துறைக்கு எஸ்பிபி ஆற்றிய தொண்டு மிகவும் சிறப்பானது.