எல்பிஎல் டி20 தொடரில் அணிகளுக்கு சல்மான் கான் குடும்பம், கேரள தொழிலதிபர் உரிமையாளர்கள்!

Update: 2020-11-27 03:01 GMT

இலங்கை டி20 தொடரான லங்கா பிரீமியர் லீக் தொடர் நேற்று முதல் தொடங்கி வரும் டிசம்பர் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கண்டி டஸ்கர்ஸ், கொழும்பு கிங்ஸ், ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ், டம்புள்ளா வைகிங், காலி கிளாடியேட்டர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்நிலையில் இதில் இரண்டு அணிகளை இந்தியாவைச் சேர்ந்தவர்கள் உரிமையாளர்களாக உள்ளனர். கண்டி டஸ்கர்ஸ் அணியின் உரிமையாளராக பாலிவுட் நடிகர் சல்மான் கானின் குடும்பம் உள்ளது. அதேபோல கொழும்பு கிங்ஸ் அணியின் உரிமையாளராக கேரளாவின் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த தொழிலபதி உள்ளார்.

சல்மான் குடும்பத்தின் கண்டி டஸ்கர்ஸ் அணியில் குசல் பெரேரா, லியம் பிளன்கட், ஸ்டெயின், இர்ஃபான் பதான், முனாஃப் பட்டேல் போன்ற அனுபவ வீரர்கள் உள்ளனர். இந்த அணியை நடிகர் சல்மான் கானின் சகோதரர் சொஹைல் கான் கவனித்து வருகிறார். சல்மான் கானின் குடும்பம் இந்த அணியின் உரிமையாளராக உள்ளதால், இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் கண்டி அணி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல கேரளா மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த தொழிலதிபரான முர்ஃபாத் முஸ்தஃபா கொழும்பு கிங்ஸ் அணியின் உரிமையாளராக உள்ளார். இந்த அணியில் மேத்யூஸ், ரஸல், தினேஷ் சந்திமல், மன்பிரீத் கோனி உள்ளிட்ட வீரர்கள் களமிறங்கியுள்ளனர். இந்த அணியில் அனுபவ தென்னாப்பிரிக்க வீரர் டுபிளசிஸ் இடம்பெற்று இருந்தார். எனினும் அவர் இங்கிலாந்து தொடர் காரணமாக எல்பிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனால் கொழும்பு அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 2017ஆம் மேற்கு வங்கத்தில் தனது சிலை திறந்த வைத்த மரடோனா – வரலாற்று பிளாஷ்பேக்