கேலோ இந்தியா யுனிவர்சிட்டி கேம்ஸ்:பளு தூக்குதலில் வெண்கலம் வென்று அசத்திய தமிழ்செல்வன், அகிலா

Update: 2020-02-28 06:17 GMT

மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் முதல் முறையாக கேலோ இந்தியா யுனிவர்சிட்டி கேம்ஸ் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டிகள் ஒடிசாவில் நடைபெற்று வருகின்றன. இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்கள் இப்போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தப் போட்டிகளில் பளுதூக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். ஆண்கள் பிரிவு 81 கிலோ எடைப் பிரிவில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச் செல்வன் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இவர் வேலூரிலுள்ள திருவள்ளுவர் பல்கலைக் கழகம் சார்பில் இப்போட்டியில் பங்கேற்றார்.

தந்தை விநாயக மூர்த்தியுடன் தமிழ்செல்வன்

இவர் இறுதிப் போட்டியில் மொத்தம் 264 கிலோ(110+145) எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார். இவருடைய தந்தை விநாயக மூர்த்தியும் தேசிய அளவில் பளு தூக்குதல் வீரராவர். எனவே தந்தையை போல இவரும் பளுத் தூக்குதலில் களமிறங்கி அசத்தியுள்ளார். 18வயதே ஆகும் தமிழ்செல்வன் இந்த எடைப் பிரிவில் பங்கேற்றதில் சிறியவர் ஆவர். மற்ற வீரர்கள் அனைவரும் இவரைவிட இரண்டு வயது அதிகமாக இருந்தனர். மேலும் தமிழ்செல்வன் பெரும் முதல் பதக்கம் இதுவாகும். எனவே அவர் மிகுந்த வெற்றி களிப்பில் உள்ளார்.

அதேபோல மகளிர் பிரிவில் 49 கிலோ எடைப் பிரிவு பளு தூக்குதல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அகிலா வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இப்போட்டியில் தமிழ்நாட்டின் அகிலா மொத்தம் 138(60+78)கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார். பதக்கம் வென்ற அகிலா மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் சார்பில் இப்போட்டியில் பங்கேற்றார்.

முன்னதாக கேலோ இந்தியா யுனிவர்சிட்டி கேம்ஸின் கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சென்னை பல்கலைக் கழகம் அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.