தரவரிசையில் மீண்டும் டாப்-10ல் நுழைந்த ஜோஷ்னா சின்னப்பா!

Update: 2020-07-09 16:21 GMT

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா முழுவதும் மிகுந்த கவலையளிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்தச் சூழலில் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக விளையாட்டு துறையில் ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு வீராங்கனை ஒருவர் சர்வதேச தரவரிசையில் டாப் 10ல் இடம்பெற்றுள்ளர்.

சர்வதேச ஸ்குவாஷ் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் மகளிர் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா 10ஆவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். ஸ்குவாஷ் தரவரிசையில் ஏற்கெனவே 19 மாதங்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த எகிப்து நாட்டின் ரணீம் திடீரென தனது ஓய்வை அறிவித்தார்.

இதனால் தற்போது வெளியாகியுள்ள புதிய தரவரிசைப் பட்டியிலில் ஜோஷ்னா சின்னப்பா 10ஆவது இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன்பு 2016ஆம் ஆண்டு ஜோஷ்னா சின்னப்பா டாப் 10 இடத்திற்குள் வந்து அசத்தினார். அதேபோல இதற்கு முன்பு மற்றொரு தமிழக வீராங்கனையான தீபிகா பல்லிகல் டாப் 10 இடத்தில் இடம்பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆடவர் பிரிவில் சவுரவ் கோஷால் 13ஆவது இடத்தில் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.