ஆஸ்கார் விருதுக்கு ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் பரிந்துரை!

Update: 2020-11-25 11:50 GMT

உலக திரைப்பட விருதுகளில் மிகவும் பிரபலம் வாய்ந்த ஒன்று ஆஸ்கார். இந்த விருதுகள் ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2021ஆம் ஆண்டிற்கான விருதுகள் அடுத்த ஏப்ரல் மாதம் வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் அதற்கான பரிந்துரை பட்டியல்கள் தற்போது தயாராகி வருகின்றன. அந்தவகையில் சிறந்த வெளிநாட்டு மொழி படம் என்ற பிரிவிற்கு இந்தியா சார்பில் ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் லிஜோ ஜோஷ் இயக்கத்தில் வெளியான படம் ஜல்லிக்கட்டு. இந்தத் திரைப்படத்தில் ஜல்லிக்காட்டு மாடு வளர்ப்பு தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதற்கான தேர்வை 14 பேர் கொண்ட தேர்வுக்குழு அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு படத்திற்கு போட்டியாக சகுந்தலா தேவி, குஞ்சன் சக்சேனா, புல்புல் உள்ளிட்ட படங்கள் இருந்தன. எனினும் 14 பேர் கொண்ட குழு ஒருமனதாக ஜல்லிக்கட்டு படத்தை இந்தியாவின் பரிந்துரையாக தேர்வு செய்துள்ளது.

கடந்த 2020 ஆஸ்கார் விருதிற்கு இந்தியா சார்பில் ‘கல்லி பாய்’ என்ற திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் இந்தியா சார்பில் இதுவரை ஒரு படம் கூட வெற்றிப் பெறவில்லை. அடுத்தாண்டு ஆஸ்கார் விருதுகளில் இந்தப் படம் வென்று அந்த ஏக்கத்தை முறியடிக்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் படிக்க - ஐஎஸ்எல் 2020-21: சென்னை அணி வெற்றி; அனிருத் தாபா சாதனை படைத்தார்