ஐடிடிஎஃப் ஓமன் ஓபன்: 21வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஜீத் சந்திரா சாம்பியன்

Update: 2020-03-15 05:05 GMT

ஐடிடிஎஃப் ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் தொடர் தற்போது ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இத்தொடரில் 21வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இந்தியாவின் ஜீத் சந்திரா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். இவர் இறுதிப் போட்டியில் சக இந்திய வீரரான மானவ் தாக்கர் விஷாலை 11-6,11-7,13-11 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

முன்னதாக இந்தப் பிரிவின் அரையிறுதிக்கு மானவ் தாக்கர் விகாஷ், சுரவாஜூல்லா ஸ்நேகித், ஜீத் சந்திரா, ஷா மனுஷ் ஆகியோர் தகுதிப் பெற்றிருந்தனர். அரையிறுதியில் போட்டியில் மானவ் தாக்கர் விஷால் சுரவாஜூல்லா ஸ்நேகித்தை 7-11,11-5,11-8-,8-11,14-12 என்ற கணக்கில் வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் ஜீத் சந்திரா ஷா மானுஷை 11-8,11-6,11-7 என்ற கணக்கில் எளிதில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றார். முதல் நான்கு இடங்களையும் இந்திய வீரர்கள் பிடித்துள்ளது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.

விஷால் மானவ் தாக்கர்

ஓமன் ஓபனின் ஆடவர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரர்களான சரத் கமல், ஹர்மித் தேசாய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர். இவர்கள் இருவரும் நேற்று நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஹர்மித் தேசாய் மூன்றாவது சுற்றில் எஜிப்த் நாட்டின் ஓமரை 7-11,11-13,11-9,11-6,8-11,11-5,11-8 என்ற கணக்கில் போராடி வீழ்த்தினார். அதன்பின்னர் நடைபெற்ற காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் அல்வரோவை 11-9,11-5,11-6,8-11,11-1 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

சரத் கமல் தனது மூன்றாவது சுற்றில் பேலாரஸ் நாட்டின் கானினை 5-11,11-5-11-3,11-5,11-7 என்ற கணக்கில் வீழ்த்தினார். அதன்பின்னர் காலிறுதியில் ஃபின்லாந்தின் பெனிடெக்ட்டை 11-7,10-12,11-3,11-8,11-6 என்ற கணக்கில் எளிதில் தோற்கடித்து சரத் கமல் அரையிறுதிக்குள் நுழைந்தார்.

இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் ஹர்மித் தேசாய் போர்சுகல் நாட்டின் மார்கோசை எதிர்கொள்கிறார். மற்றொரு அரையிறுதியில் சரத் கமல் ரஷ்யாவின் கிரிளை எதிர்கொள்கிறார். இன்றே இத்தொடரின் இறுதிப் போட்டியும் நடைபெற உள்ளது. எனவே இரு இந்தியர்களுள் யாராது ஒருவர் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.