ஐஎஸ்எல்: சென்னையின் எப்சியின் முதல் மூன்று ஆட்டங்களின் அலசல்

Update: 2020-12-06 03:47 GMT

ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசனில் சென்னையின் எப் சி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் மூன்று விதமான முடிவுகள் வந்துள்ளது. முதல் ஆட்டத்தில் வெற்றியுடன் தொடங்கினாலும் அடுத்த ஆட்டங்களில் சமன் மற்றும் தோல்வியே வந்துள்ளது. இந்த மூன்று ஆட்டங்களிலும் அணியின் மேனேஜர் ஷாபா லாஸ்லோ ஒரே அணியினையே ஆடவைத்தார். முதல் ஆட்டத்தில் அதிரடியாக தொடங்கி கோல்கள் அடித்து அசத்தினாலும் அடுத்த இரண்டு ஆட்டங்களிலும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இரண்டாவது ஆட்டத்தில் கேரளா பிலாஸ்டர்ஸ் அணிக்கெதிராக கோல் அடிக்காவிட்டாலும் சென்னை அணி நிறைய வாய்ப்புகளை உருவாக்கியது. அத்தோடு எதிரணியினை கோல் அடிக்க விடாமல் தடுத்து இந்த சீசனின் முதல் க்ளீன் ஷீட்டினை வைத்தனர்.

தனது மூன்றாவது ஆட்டத்தில் சென்னையின் எப் சி அணி தங்களது முக்கிய போட்டியாளரான பெங்களூரு எப் சி அணியினை எதிர்கொண்டனர். ரசிகர்கள் எதிர்பார்த்ததைப் போல ஆட்டம் தொடக்கம் முதலே அதிரடியாக இருந்தது. சென்னை அணி கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட பெங்களூரு அணியோ சென்னை வீரர்களை தடுப்பதில் குறியாக இருந்தனர். தேவையில்லாத ஆக்ரோஷமாக ஆட்டத்தை வெளிப்படுத்தியில் சென்னை அணியின் முக்கிய வீரரான அனிருத் தாபா காயமடைந்து ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் ஆட்டத்தில் நடந்த பல நிகழ்வுகளையும் நடுவர் பெங்களூரு அணிக்கு சாதகமாகவே வழங்கினார். குறிப்பாக சென்னை அணிக்கு கிடைக்க வேண்டிய நிச்சயமான பெனால்டி வாய்ப்பினை வழங்கவில்லை. ஆட்டத்தின் முடிவில் ஒரு கோல் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

[embed]https://twitter.com/ChennaiyinFC/status/1334890174166134784[/embed]

தோல்வியை விட ஆட்டத்தில் நடந்த நிகழ்வுகளும், அனிருத் தாபாவிற்கு ஏற்பட்ட காயமே சென்னையின் அணியினையும் ரசிகர்களையும் அதிகம் பாதித்துள்ளது. குறிப்பாக அவரது காயம் மோசமான நிலையில் உள்ளது என்று மேனேஜர் லாஸ்லோ கூறியுள்ளது ரசிகர்களை மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த அனைத்து விஷயங்களிலிருந்தும் மீண்டு மும்பை சிட்டி எப் சி அணிக்கெதிரான அடுத்த ஆட்டத்தில் சென்னையின் அணி வெற்றி பெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.