ஐஎஸ்எல் 2020 - 21: சென்னையின் எப் சி அணி - ஒரு பார்வை

Update: 2020-11-20 10:53 GMT

இந்திய கால்பந்து ரசிகர்கள் கொண்டாடும் முக்கிய திருவிழாவான இந்தியன் சூப்பர் லீக் தொடரின் ஏழாவது சீசன் இன்று தொடங்குகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து போட்டிகளும் கோவாவில் நடக்கவிருக்க, இன்று தொடங்கும் முதல் ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் அணியும் கேரளா பிலாஸ்டர்ஸ் அணியும் மோதுகின்றனர்.

இரண்டு முறை பட்டம் வென்ற அணியும் கடந்த ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணியுமான நமது சென்னையின் எப் சி அணி இந்த முறை புது பொலிவுடன் களமிறங்குகிறது. கடந்த சீசனில் அணியை சிறப்பாக வழிநடத்திய ஓவன் காயல், மற்றும் கடந்த சீசனில் அதிக கோல்கள் அடித்த நெர்கா வால்ஸ்கிஸ் ஆகிய இருவரும் ஜாம்ஷெட்பூர் அணிக்கு சென்ற நிலையில் ஸாபா லாஸ்லோ தலைமையில் புதிய பயிற்சியாளர்கள் குழு மற்றும் புதிய வெளிநாட்டு வீரர்களுடன் விளையாட உள்ள சென்னை அணியினைப் பற்றி சிறிது அலசி ஆராய்வோம்:

பலம்:

சென்னையின் எப் சி அணியின் மிகப்பெரிய பலமே இறுதி வரை விடாமல் போராடுவது தான். கடந்த சீசனிலும் சரி பட்டம் வென்ற இரண்டு சீசன்களின் இவர்கள் விளையாடிய விதமே இதற்கு எடுத்துக்காட்டாகும். யாரும் வாய்ப்பு கொடுக்காதா நிலையில் சிறப்பாக விளையாடி அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தவர்கள்.

இப்போது உள்ள அணியின் மற்றொரு பலம் அணியில் உள்ள இந்திய வீரர்கள். அனிருத் தாபா, விஷால் கைத், எட்வின் சிட்னி வான்ஸ்பால் உட்பட பல தேசிய அணி குழுவில் இடம்பெற்றுள்ள வீரர்கள் இருப்பது சிறப்பம்சமாகும்.

பலவீனம்:

மற்ற அணிகளைப் போல போதிய பயிற்சிக்கான நேரம் இல்லாத பிரச்சினை இருந்தாலும், சென்னை அணிக்கு இருக்கும் மற்றொரு பலவீனம் புதிய வரவுகள் தான். பயிற்சியாளர்கள் முதற் கொண்டு நிறைய வெளிநாட்டு வீரர்களும் புதியவர்கள். அவர்கள் இங்கு எவ்வாறு விளையாடுவார்கள் என யாரும் கூறமுடியாது. அவர்கள் விரைவாக மற்ற வீரர்களுடன் ஒன்றிணைத்து ஆடவேண்டும் என்பதே தமிழக ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

 

முக்கிய வீரர்கள்:

சென்னையின் எப் சி அணியின் சிறப்பம்சமே அதன் நடுகள வீரர்கள் தான். அடுத்த இந்திய கால்பந்து நட்சத்திரம் என் அனைவராலும் கருதப்படும் அனிருத் தாபா மற்றும் கடந்த சீசனின் சிறந்த நடுகள வீரரான பிரேசிலைச் சேர்ந்த ரஃபேல் கிரிவெல்லாரோ ஆகிய இருவரும் இந்த சீசனும் சிறப்பாக விளையாடினால் சென்னையின் அணி நிச்சயம் பலம் வாய்ந்த ஒன்றாக இருக்கும்.

கடந்த சீசனில் இறுதி ஆட்டத்தில் தவறவிட்ட கோப்பையை இந்த முறை வெல்ல வேண்டும் என்பதே அனைத்து தமிழகக் கால்பந்து ரசிகர்களின் கனவாகும்.

மேலும் படிக்க: ஐஎஸ்எல் தொடரில் ஜொலிக்க காத்திருக்கும் ஐ லீக் நட்சத்திரங்கள்