ஐபிஎல் யார்க்கர் நாயகன் நடராஜனின் கனவை நிஜமாக்கிய வருண் சக்ரவர்த்தியின் காயம்!

Update: 2020-11-10 03:50 GMT

நடப்பு ஐபிஎல் தொடரில் தமிழ்நாட்டு வீரர்கள் சிறப்பான பங்களிப்பை தந்தனர். இதில் குறிப்பாக வருண் சக்ரவர்த்தி தனது மாயாஜால சுழலால் நடப்புத் தொடரில் 5 விக்கெட் வீழ்த்திய ஒரே வீரராக வலம் வருகிறார். இந்தச் சிறப்பான பந்துவீச்சு அவருக்கு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பை பெற்று தந்தது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் இறுதிக் கட்டத்தில் வருண் சக்ரவர்த்திக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த காயம் மற்றோரு தமிழ்நாட்டு வீரரான நடராஜனின் கனவை நிஜமாக்கியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த நடராஜன் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதையே தனது கனவாக கொண்டு விளையாடி வருகிறார்.

தற்போது அவரின் கனவு நிஜமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் வருண் சக்ரவர்த்திக்கு பதிலாக நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். தனது யார்க்கர் மூலம் பேட்ஸ்மேன்களை திணறடித்த நடராஜன் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் டி20 தொடரில் பும்ரா,ஷமி உள்ளிட்ட அனுபவ வேகப்பந்து வீச்சாளர்களுடன் நடராஜனும் பந்துவீச உள்ளார். சின்னாலம்பட்டியைச் சேர்ந்த நடராஜன் இந்திய ஜெர்ஸியுடன் விளையாட உள்ளது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அண்மையில் தான் நடராஜனுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் அவருடைய குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மற்றொரு தமிழ்நாட்டு வீரர் வருண் சக்ரவர்த்தியும் முதல் முறையாக இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். அவருக்கு ஏற்பட்ட இந்த காயம் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனினும் அவருக்கு பதிலாக நடராஜன் தேர்வாகியுள்ளது சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க: ஐபிஎல் தொடரில் லாரவை கவர்ந்த 6 இந்திய வீரர்கள் யார் தெரியுமா?