ஐபிஎல்: டெல்லி தாபா தாத்தா பாட்டிக்கு கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலர் உதவி - நெகிழ்ந்த தம்பதி

Update: 2020-10-09 02:56 GMT

டெல்லியின் மால்வியா பகுதியில் கந்தா பிரசாத்-பதாமி தேவி என்ற வயதான தம்பதியினர் உணவு தாபா கடையை நடத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இவரது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இடத்தில் தாபா கடையை நடத்தி வருகின்றனர். இவர்கள் தினமும் காலை 6.30 மணி முதல் தங்களது வேலையை தொடங்கி 9.30 மணி முதல் அனைவருக்கும் மலிவு விலையில் உணவு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களது தற்போது நிலை குறித்து பேட்டி எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் பதிவிட்டார். அதில் அந்த வயதான தம்பதி கண்ணீர் மல்க தங்களின் துயரத்தை பகிர்ந்து கொண்டனர். இதில் அந்த பெரியவர், “நான்கு மணி நேரம் வேலை பார்த்து நாங்கள் வெறும் 50 ரூபாய் தான் சம்பாதித்தோம்” எனக் கூறியிருந்தார். இதனையடுத்து இந்த வீடியோ ட்விட்டர் தளத்தில் மிகவும் வைரலாக தொடங்கியது. இந்த வீடியோவை பார்த்து பலர் அந்தக் கடைக்கு சென்று சாப்பிட ஆரம்பித்தனர். மேலும் பலர் தம்பதிக்கு உதவி கரம் நீட்ட தொடங்கினர்.

இந்த வீடியோ குறித்து இந்திய கிரிக்கெட் வீரரும் டெல்லி கேப்டல்ஸ் அணியின் வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இந்த தம்பதிக்கு நாம் கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் தம்பதிக்கு உதவிகள் கிடைக்கும் வீடியோ பதிவிட்டு, “சமூக வலைதளங்கள் மூலம் நாம் நல்லதை செய்ய முடியும் என்பதற்கு இது ஒரு சான்று. சமூக வலைதளத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது நமது முடிவில் தான் உள்ளது” என அஸ்வின் கூறியுள்ளார்.

அதேபோல டெல்லி கேப்டல்ஸ் அணியும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் இந்த தம்பதி தொடர்பாக ஒரு பதிவை இட்டுள்ளது. அதில், “இது மிகவும் கடினமான நேரம். இந்த நேரத்தில் டெல்லி மக்கள் நமது உள்ளூர் வியாபாரிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என வேண்டுகோள் வைத்தது. பின்னர் டெல்லி மக்கள் அதிகளவில் அங்கு சென்று சாப்பிடுவதை பாராட்டும் விதமாக மற்றொரு ட்வீட் செய்துள்ளது. அதில், “டெல்லி மக்களின் இதயம் கணிந்த செயல் ஒரு சான்று. டெல்லி மக்களின் இந்த செயல் எங்களை மிகவும் நெகிழ வைத்துள்ளது” எனப் பதிவிட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு பெரும் சோகத்திலிருந்து வயதான தம்பதியின் முகத்தில் தற்போது ஒரு ஆனந்த சிரிப்பை பார்க்க முடிகிறது. வாழ்க்கையில் நம்மால் முடிந்த வரை அடுத்தவரை மகிழ்ச்சியடைய செய்தால் அது நமக்கு பெரிய மனநிறைவை தரும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று. மேலும் சமூக வலைதளங்கள் மூலம் பலரின் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதை நாம் பல முறை நிரூபித்துள்ளோம்.

மேலும் படிக்க: சிஎஸ்கே எடுக்க தவறிய தமிழ்நாட்டு வீரர்கள்