ஐபிஎல்: ‘தனது குழந்தை பிறப்பை வெற்றியுடன் கொண்டாடிய’ சன்ரைசர்ஸ் அணியின் நடஜாரன்

Update: 2020-11-07 02:39 GMT

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பெங்களூரு-சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய சன்ரைசர்ஸ் அணி பெங்களூரு அணியின் பேட்டிங்கை பதம் பார்த்தது. இறுதியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வென்றது.

நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசி வரும் நடராஜன் நேற்றும் அற்புதமாக யார்க்கர் பந்தின் மூலம் டிவில்லியர்ஸை அவுட் ஆக்கினார். இந்தத் தொடர் மிகவும் சிறப்பானதாக அமைந்த நடராஜனுக்கு நேற்று தனது சொந்த வாழ்க்கையிலும் ஒரு சிறப்பான செய்தி கிடைத்தது. அதாவது நடராஜனுக்கும் அவரது மனைவிக்கும் நேற்று ஒரு பெண் குழந்தை பிறந்தது. தனக்கு குழந்தை பிறந்த சந்தோஷத்தை நடராஜன் வெற்றியுடன் கொண்டாடியுள்ளார்.

இதுதொடர்பாக சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் போட்டி முடிந்தவுடன், “இன்று காலை நடராஜன் மற்றும் அவரது மனைவிக்கும் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு இதைவிட சிறந்த பரிசை கொடுத்திருக்க முடியாது. இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.

நடராஜன் இந்த ஐபிஎல் தொடரில் தோனி, டிவில்லியர்ஸ் உள்ளிட்ட சிறந்த பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கியுள்ளார். நேற்றைய போட்டியிலும் அவர் சரியான நேரத்தில் அரைசதம் கடந்திருந்த டிவில்லியர்ஸின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். சன்ரைசர்ஸ் அணியின் வெற்றியுடன் நடராஜன் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: விராட் கோலியை நிராகரித்த அணி எது தெரியுமா? – ஃபிளாஷ்பேக்