ஐபிஎல்: தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற போராடும் மன்தீப் சிங்!

Update: 2020-10-27 03:44 GMT

நடப்பு ஐபிஎல் தொடரில் மன்தீப் சிங் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 23ஆம் தேதி இரவு மன்தீப் சிங்கின் தந்தை ஹர்தேவ் சிங் காலமானார். தந்தையின் மரண துயரத்தை தாங்கி கொண்டு மன்தீப் சிங் 24ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் களமிறங்கினார். இது அவருக்கு பலரிடமிருந்து மரியாதையை பெற்று தந்தது.

இந்நிலையில் மன்தீப் சிங் தந்தையின் கடைசி ஆசை குறித்து அவரது அண்ணன் ஹர்விந்தர் சிங் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், அப்பாவை சேர்த்து இருந்த மருத்துவமனை அறையில் டிவி சரியாக இல்லை. அவர் மருத்துவமனை அதிகாரிகளிடம் முறையிட்டு டிவியை சரி செய்ய கோரிக்கை விடுத்தார். ஏனென்றால் அவருக்கு மன்தீப் சிங் ஐபிஎல் தொடரில் களமிறங்குவதை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனையினர் டிவியை சரி செய்து கொடுத்தனர். அதில் கடைசி வரை என்னுடைய அப்பா மன்தீப் சிங்கின் ஆட்டத்தை பார்த்து ரசித்தார். நானும் என்னுடைய தம்பியை போல் 10வயது வரை கிரிக்கெட் விளையாடினேன். எனினும் எங்களுடைய வீட்டின் சூழ்நிலையை கருதி அப்பா என்னை படிப்பில் கவனம் செலுத்த கூறினார். அத்துடன் அவருக்கு கிரிக்கெட் விளையாட்டு பிடிக்கவில்லை.

என் தந்தை ஒரு தடகள பயிற்சியாளர். அத்துடன் அந்த சமயத்தில் எங்களின் வீட்டில் வறுமையால் பயிற்சிக்கு பணம் கட்ட முடியவில்லை. இதனையடுத்து என்னுடைய தம்பி மன்தீப் சிங் கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டினான். அப்போது எங்கள் வீட்டில் மீண்டும் ஒரு பிரச்னை எழுந்தது. அந்த சமயத்தில் நான் தான் என்னுடைய தந்தையிடம் பேசி மன்தீப் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று கூறினேன்.

அதன்பின்னர் மன்தீப் சிங் யு-19 இந்திய அணியில் இடம்பிடித்தார். அந்தத் தருணம் முதல் அப்பாவிற்கு கிரிக்கெட் மீது இருந்த வெறுப்பு சற்று குறைய ஆரம்பித்தது. 2016ஆம் ஆண்டு மன்தீப் சிங் இந்திய அணிக்காக விளையாடிய போது அப்பா நாள் முழுவதும் அழுது கொண்டிருந்தார். எனினும் 2017ஆம் ஆண்டிற்கு பிறகு மன்தீப் சிங்கிற்கு ஏற்பட்ட காயம் கிரிக்கெட் வாய்ப்புகளுக்கு முட்டு கட்டை போட்டது.

இதனால் மீண்டும் இந்திய அணிக்காக மன்தீப் சிங் விளையாட வேண்டும் என்பதே எனது தந்தையின் ஆசை. இதனால் தான் தந்தை இறந்த செய்தி கேட்டு மன்தீப் சிங் இந்தியா வரவேண்டும் என்று கூறினான். நான் தான் அவனிடம் அப்பாவின் கடைசி ஆசையை கூறி ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்தும்படி கூறினேன். அப்போது தான் மன்தீப் சிங் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: ’கொரோனா பாதிப்பு டூ மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்’- ருதுராஜ் கெய்க்வாட்டின் எழுச்சிப் பயணம்