ஐபிஎல்: 'நான் நடிகர் விஜயை நேரில் சந்திக்க வேண்டும்'- மனம்திறந்த வருண் சக்ரவர்த்தி

Update: 2020-10-31 11:35 GMT

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் பரபரப்பான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சிஎஸ்கே அணி சிறப்பாக விளையாடாவிட்டாலும் தமிழக வீரர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தனது மாயாஜால சுழற்பந்து வீச்சு மூலம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர் வருண் சக்ரவர்த்தி.

விளையாடிய முதல் ஆட்டத்திலிருந்தே சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அதிக ரன்கள் விட்டுக் கொடுக்காமல் விக்கெட்களையும் வீழ்த்தி வருகிறார். தோனியின் விக்கெட்டை இரண்டு முறை வீழ்த்தி அனைவரின் பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதற்கு பலனாக அடுத்து நடக்கவிருக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்.

கிரிக்கெட் களத்தை விட்டு வெளியேவும் இவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். காரணம்? கேகேஆர் அணி ட்விட்டரில் வெளியிட்ட ஒரு புகைப்படம். அதில் இவரது இடது கையில் இருந்த டாட்டூ மிகவும் வைரலானது. அது பிரபல திரைப்பட நடிகர் விஜய் அவர்களின் புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய்யின் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து இவரை கொண்டாடி தீர்த்தனர்.

அந்த டாட்டூ குறித்து வருண் எதுவும் கூறாவிட்டாலும் பிஹைன்ட்வுட்ஸ் சேனலுக்கு அவர் அளித்த நேர்காணல் இதை உறுதிப்படுத்தியுள்ளது. அதில் தான் ஒரு தீவிர விஜய் ரசிகர் என்றும் அவரை ஒருமுறையாவது சந்தித்து விட வேண்டும் என்ற தனது நீண்டகால ஆசையை தெரிவித்திருந்தார். அவரது ஆசை விரைவில் நிறைவேறும் என நம்புவோம்.

மேலும் படிக்க: ’கொரோனா பாதிப்பு டூ மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்’- ருதுராஜ் கெய்க்வாட்டின் எழுச்சிப் பயணம்