ஐபிஎல்: கொரோனா டூ பிராவோ விலகல் வரை சென்னை அணிக்கு ஏற்பட்ட அடுத்தடுத்த சறுக்கல்கள்

Update: 2020-10-21 11:22 GMT

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் தடுமாறி வருகிறது. இந்தத் தொடரில் இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 3 வெற்றி, 7 தோல்வி என சென்னை அணி சொதப்பியுள்ளது. இந்த ஐபிஎல் தொடர் தொடங்கவதற்கு முன்பே சென்னை அணிக்கு சோதனைகள் ஆரம்பித்து விட்டன. அவை என்ன? தொடரின் போது சென்னை அணி சந்தித்த சோதனை என்ன?

கொரோனா பாதிப்பு:

ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக அனைத்து அணிகளும் யுஏஇ சென்று தனிமைபடுத்தப்பட்டனர். அப்போது அணிகள் யுஏஇ வந்தவுடன் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த சில வீரர்கள் மற்றும் சில பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே சென்னை அணிக்கு இது பின்னடைவாக அமைந்தது.

ரெய்னா விலகல்:

கொரோனா பிரச்னை முடிவதற்குள் சென்னை அணிக்கு மற்றொரு பெரிய அதிர்ச்சி வந்தது. நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா தனது சொந்த காரணங்களுக்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். இது சென்னை அணிக்கு முக்கிய பின்னடைவாக அமைந்தது. ஏனென்றால் சென்னை அணிக்கு அனைத்து சிசன்களிலும் பலம் வாய்ந்த வீரராக சுரேஷ் ரெய்னா இருந்தார். அவரின் திடீர் விலகல் சென்னை அணியின் பேட்டிங்கை மிகவும் பலவீனமாக்கியது.

ஹர்பஜன் சிங் விலகல்:

ரெய்னாவை தொடர்ந்து மற்றொரு நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். ஹர்பஜன் மாதிரியான அனுபவம் வாய்ந்த வீரர் விலகியது சென்னை அணிக்கு பந்து வீச்சில் பெரிய இழப்பாக அமைந்தது. ஏனென்றால், அவர் தனது அனுபவத்தின் மூலம் நடு ஓவர்களில் ரன் விகிதத்தை கட்டுபடுத்த கூடியவர். இதனால் இது சென்னை அணிக்கு வந்த அடுத்த சோதனையாக அமைந்தது.

தொடர் தோல்விகளால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்:

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் வெற்றிப் பெற பிறகு சென்னை அணி தொடர்ந்து பல தோல்விகளை சந்தித்து. பேட்டிங், பவுலிங், ஃபில்டிங் என அனைத்திலும் இம்முறை சென்னை அணி சொதப்பியுள்ளது. இதன்காரணமாக சென்னை அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. விளையாடிய அனைத்து ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய சென்னை அணி, முதல் முறை இந்தத் தொடரில் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.

பிராவோ விலகல்:

ஏற்கெனவே கடைசி இடத்திலிருக்கும் சென்னை அணிக்கு தற்போது மீண்டும் ஒரு சோதனை வந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் பிராவோ காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். நடப்புத் தொடரில் பிராவோ பேட்டிங்கில் சொதப்பியிருந்தாலும், பந்துவீச்சில் சற்று ஆறுதல் அளித்தார். அவர் நடு ஓவர்களில் ஒரளவு ரன் விகதத்தை கட்டுபடித்தி வந்தார். அவரும் தற்போது விலகியுள்ளதால் சென்னை அணி இனி வரும் நான்கு போட்டிகளில் என்ன செய்ய போகிறது என்று ரசிகர்கள் கவலையுடன் உள்ளனர்.

மேலும் படிக்க: சஞ்சு சாம்சன் வாழ்க்கையை மாற்றிய கோலியின் அறிவுரை