ஐபிஎல் தொடரில் லாரவை கவர்ந்த 6 இந்திய வீரர்கள் யார் தெரியுமா?

Update: 2020-11-09 07:11 GMT

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் சிலர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக இளம் வீரர்கள் சிலர் தங்களின் ஆட்டத்தின் மூலம் பல ஜாம்பவான் வீரர்களை கவர்ந்துள்ளனர்.

அந்தவகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் வீரரான லாராவையும் சில இந்திய வீரர்கள் கவர்ந்துள்ளனர். இதுகுறித்து லாரா ஒரு 6 வீரர்களின் பெயரை பட்டியலிட்டுள்ளார்.

1.சஞ்சு சாம்சன்:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சான் லாராவை மிகவும் கவர்ந்துள்ளார். அவரின் ஆட்டம் குறித்து லாரா, “சஞ்சு சாம்சானின் திறமையை பார்த்து நான் வியந்திருக்கிறேன். அவரிடம் இருக்கும் திறமை மூலம் அவர் உயர்வான இடத்தை விரைவில் எட்டுவார்” எனத் தெரிவித்துள்ளார். சஞ்சு சாம்சன் நடப்பு தொடரில் 14 போட்டிகளில் 375 ரன்கள் அடித்தார்.

2. சூர்யகுமார் யாதவ்:

மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பர் 3 வீரரான சூர்யகுமார் யாதவ் நடப்பு தொடரில் 15 போட்டிகளில் 461 ரன்கள் அடித்துள்ளார். இவர் குறித்து லாரா, “நடப்பு ஐபிஎல் தொடரில் எனக்கு மிகவும் பிடித்த வீரர் சூர்யகுமார் யாதவ் தான். ஒரு அணியின் சிறந்த வீரர் ஒன்று தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் அல்லது 3ஆவது வீரராக களமிறங்க வேண்டும். அந்தவகையில் சூர்யா மூன்றாவது இடத்தில் களமிறங்கி அசத்தி வருகிறார்” எனக் கூறியுள்ளார்.

3. தேவ்தத் படிக்கல்:

நிழற்படம்: ஐபிஎல்

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் டாப் ஸ்கோரர் படிக்கல் தான். படிக்கலின் ஆட்டம் குறித்து லாரா, “படிக்கல் ஒரு இளம் வீரர். அவரிடம் நல்ல திறமை உள்ளது. எனினும் அவர் ஒரு சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். என்னைப் பொருத்தவரை நல்ல வீரர் என்றால் அவர் டி20 அல்லது ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வீரர் அல்ல. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அளவிற்கு ஒரு நல்ல வீரர் வளர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

4. கே.எல்.ராகுல்:

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர் கே.எல்.ராகுல். அவர் 14 போட்டிகளில் 670 ரன்கள் விளாசினார். கே.எல்.ராகுலின் ஆட்டத்தையும் லாரா பாராட்டியுள்ளார்.

5. பிரியம் கர்க்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் நடப்பு தொடரில் சிறப்பாக விளையாடிய இரண்டு இளம் வீரர்களில் பிரியம் கர்கும் ஒருவர். முதல் ஐபிஎல் சீசனில் களமிறங்கும் இவர் பேட்டிங் ஃபில்டிங் என இரண்டிலும் சற்று அசத்தினார். பிரியம் கர்கிற்கு அதிக திறமை உள்ளது என்று லாரா புகழாரம் சூட்டியுள்ளார்.

6. அப்துல் சமாத்:

அப்துல் சமாத் (நிழற்படம்: ஐபிஎல்)

ஜம்மு-காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சமாத். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக நடப்புத் தொடரில் அவர் உருவெடுத்துள்ளார். 18 வயதான அப்துல் சமாத் நடப்புத் தொடரில் தான் முதல் முறையாக ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கியுள்ளார். இவர் நேற்றைய போட்டியில் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம் லாராவையும் அதிகம் கவர்ந்துள்ளது.

மேலும் படிக்க: முதல் முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்ற டெல்லி அணியை ட்விட்டரில் பாராட்டும் ரசிகர்கள்!