ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: 3 தங்கப்பதக்கங்களை அள்ளிய இந்திய வீராங்கனைகள்

Update: 2020-02-20 16:11 GMT

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் டில்லியில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான இன்று 3 தங்கப்பதக்கங்களை இந்திய வீராங்கனைகள் வென்றுள்ளனர். சரிதா மோர் (59 கிலோ), பிங்கி (55 கிலோ), திவ்யா காக்கரன் (68 கிலோ) ஆகியோர் 3 தங்கப்பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்.

கே.டி ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் நடந்த 59 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில், மங்கோலியாவின் பாட்செட்செக் அட்லாண்ட்செட்செக்கை எதிர்த்து விளையாடிய சரிதா 3-2 என்ற கணக்கில் போட்டியை வென்றார்

55 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில், 2-1 என்ற புள்ளிக்கணக்கில் மங்கோலியாவின் டுல்கம் போலரோமாவை இந்தியாவின் பிங்கி வீழ்த்தினார். இதற்கு முன்பு நடந்த அரை இறுதிப்போட்டியில், கசக்கஸ்தான் வீராங்கனை மரினா சுயேவாவை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாளின் முதல் தங்கப்பதக்கத்தை இந்திய வீராங்கனை திவ்யா காக்கரன் வென்றார். ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற சாதனையோடு இறுதிப்போட்டியை வென்றார். 68 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.

இதற்கு முன்பு, 2018 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நவ்ஜீத் கவுர் 65 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றிருந்தார். இதுவே, ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை ஒருவர் வென்ற முதல் தங்கப்பதக்கம் ஆகும்.

3 தங்கப்பதக்கங்கள் மட்டுமில்லாது, இந்தியாவுக்கு இன்று ஒரு வெள்ளிப்பதக்கமும் கைக்கூடியது. மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில், ஜப்பானின் மிஹோ இகரஷியிடம் இந்தியாவின் நிர்மலா தேவி தோல்வியடைந்தார். இதனால், இரண்டாம் இடம் பிடித்த நிர்மலா தேவி வெள்ளிப்பதக்கம் வென்றார். மூன்று தங்கப்பதக்கங்கள், ஒரு வெள்ளி என இன்றைய நாளில் இந்திய வீராங்கனைகள் அசத்தினர்.