ஐடிஎஃப் தாய்லாந்து டென்னிஸ் தொடரை வென்ற இந்தியாவின் அங்கிதா ரெய்னா

Update: 2020-02-02 05:51 GMT

ஐடிஎஃப் தாய்லாந்து டென்னிஸ் தொடரில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா அசத்தினார். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில், அங்கிதா ரெய்னா சாம்பியன்ஷிப் வென்றுள்ளார்.

இன்று நடைபெற்ற இறுதி போட்டியில், பிரான்சின் சோலோ பக்கெட்டை எதிர்த்து களமிறங்கினார். இந்த போட்டியில், 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் அங்கிதா வெற்றி பெற்றார். இந்த ஆண்டு, ஒற்றையர் பிரிவில் அங்கிதா பெறும் முதல் சாம்பியன்ஷிப் பட்டம் இது.

இதுமட்டுமின்றி, பெண்களுக்கான இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியையும் வென்று அசத்தியுள்ளார். நேற்று நடந்த பெண்களுக்கான இரட்டையர் பிரிவு இறுதி போட்டியில், நெதர்லாந்தின் பிபியானே சூவ்ஸ் உடன் இணைந்து விளையாடினார் . இவர்களை எதிர்த்து தாய்லாந்தின் சவாங்கே – குயேரம் இணை போட்டியிட்டது. இதில், 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அங்கிதா – பிபியானே இணை இறுதிப்போட்டியை வென்றது.

குஜராத்தைச் சேர்ந்த 27 வயதாகும் அங்கிதா ரெய்னா, இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை.பெண்களுக்கான ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் தற்போது இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையாக உள்ளார். மேலும், உலக டென்னிஸ் தரவரிசையில் 200 இடங்களுக்குள் நுழைந்த இந்திய வீராங்கனையாகவும் உள்ளார். இந்த ஆண்டு, டாப் 100-க்குள் நுழைய வேண்டும் என்ற நோக்கில் விளையாடி வருகிறார்.