இந்திய கேப்டன் மன்பிரீத் சிங் உட்பட நான்கு ஹாக்கி வீரர்களுக்கு கொரோனா உறுதி

Update: 2020-08-07 16:04 GMT

கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை மிகவும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது ஒரு சில இடங்களில் கொரோனா நோய் தொற்று சற்று குறைந்துள்ளதால் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மீண்டும் இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் முகாம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக இந்திய ஹாக்கி அணியின் வீரர்கள் மீண்டும் பெங்களூரு முகாமிற்கு அழைக்கப்பட்டனர். அப்போது அங்கு வந்துள்ள இந்திய ஹாக்கி வீரர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் இந்திய கேப்டன் மன்பிரீத் சிங், சுரேந்தர் குமார், ஜஸ்கரன் சிங் மற்றும் வருண் குமார் ஆகிய நான்கு வீரர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மன்பிரீத் உள்ளிட்ட வீரர்கள் பெங்களூரு முகாமில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் ஒரு சில வீரர்களின் கொரோனா தொற்று சோதனை முடிவு தெரியவரவில்லை. எனவே அனைத்து வீரர்களும் தற்போது தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று உறுதியான நான்கு வீரர்களும் நல்ல சீரான உடல்நிலையுடன் உள்ளனர் என்ற தகவல் தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே கடந்த நான்கு மாதங்களாக பெங்களூரு முகாமில் ஊரடங்கினால் இந்திய ஹாக்கி வீரர்கள் சிக்கி தவித்தனர். இவர்கள் அனைவரும் கடந்த ஜூன் 19ஆம் தேதி தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: மீண்டும் பயிற்சிக்கு திரும்பிய சிந்து, சாய் பிரணீத் ! - வீடியோ