‘கடுமையான சூழலிருந்து வந்து கிரிக்கெட்டில் சாதிக்க நடராஜன் ஒரு முன்னுதாரணம்’ - ஹர்திக் பாண்ட்யா

Update: 2020-12-02 13:17 GMT

ஆஸ்திரேலியா-இந்தியா இடையே மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கான்பராவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிப் பெற்றது. இப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

முதல் முறையாக இந்திய அணிக்காக களமிறங்கிய நடராஜன் தனது 3ஆவது ஓவரிலேயே முதல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். அதன்பின்னர் தனது கடைசி ஓவரில் மீண்டும் நடராஜன் மற்றோரு விக்கெட் வீழ்த்தினார். இதனால் இந்தப் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 70 ரன்கள் விட்டு கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். மேக்ஸ்வெலின் அதிரடி அடித்த ஓவருக்கு பின்னர் மீண்டும் வந்து சிறப்பான யார்க்கர் பந்துகளை நடராஜன் வீசி அசத்தினார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்ட்யா இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது பேசிய ஹர்திக் பாண்ட்யா, “நான் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது. ஆஸ்திரேலிய தொடரில் நான் விளையாடியது மிகவும் சிறப்பான ஒன்று. நடராஜனின் பயணம் மிகவும் சிறப்பானது. கடுமையான சூழலில் இருந்து வந்து கிரிக்கெட் விளையாட்டில் வெற்றி பெற நடராஜன் ஒரு முன்னுதாரணம்” எனத் தெரிவித்தார்.

ஏற்கெனவே ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசிய நடராஜனை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பாராட்டியிருந்தார். அவர், “என்னுடைய ஐபிஎல் ஹீரோ நடராஜன் தான்” எனப் புகழந்திருந்தார். தற்போது சிறப்பாக சர்வதேச போட்டியை நடராஜனுக்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: ‘வடசென்னையும் குத்துச்சண்டையும்’- பா.ரஞ்சித்,ஆர்யா கூட்டணியில் ‘சார்பட்டா பரம்பரை’!