ஆசிய குத்துச்சண்டை ஒலிம்பிக் தகுதிச்சுற்று: முதல் நாள் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி

Update: 2020-03-04 03:11 GMT

2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குத்துச்சண்டை விளையாட்டுக்கான ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள் ஜோர்டனில் தொடங்கி உள்ளது. மார்ச் 3-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ள தொடரில் பங்கேற்க இந்திய வீரர் வீராங்கனைகள் ஜோர்டன் விரைந்துள்ளனர்.

சீனாவில் நடைபெற இருந்த குத்துச்சண்டை தகுதிச்சுற்று போட்டிகள், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து 13 வீரர் வீராங்கனைகள் இதில் பங்கேற்கின்றனர்

முதல் நாளான நேற்று, இந்தியாவுக்கு இரண்டு வெற்றி. ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவில் கவுரவ் சோலாங்கி முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். காமென்வெல்த் சாம்பியனான இவர், கிர்கிஸ்தானின் அகெல்பெக் எஸன்பெக் எதிரான போட்டியில் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இதே போல, 75 கிலோ எடைப்பிரிவில் ஆஷிஷ் குமார் வெற்றி பெற்றுள்ளார். தாய்வானின் சியா-வெய் எதிரான போட்டியில் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இன்று நடைபெற இருக்கும் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் விளையாட உள்ளனர். 60 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சிம்ரன்ஜித் கவுர் கசாக்ஸ்தானின் ரிம்மாவை எதிர்கொள்கிறார். 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சாக்‌ஷி, தாய்லாந்தின் நிலாவானை எதிர்கொள்கிறார்.

ஆசிய குத்துச்சண்டை ஒலிம்பிக் தகுதிச்சுற்று தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர் வீராங்கனைகளின் விவரம்:

இந்திய வீரர்கள்: அமித் பங்கல் (52 கிலோ), கவுரவ் சோலாங்கி (57 கிலோ), மனிஷ் கவுஷிக் (63 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (69 கிலோ)), ஆஷிஷ் குமார் (75 கிலோ), சச்சின் குமார் (81 கிலோ)), நமன் தன்வார் (91 கிலோ)), சதிஷ் குமார் (91+ கிலோ)

இந்திய வீராங்கனைகள்: மேரி கோம் (51 கிலோ), சாக்‌ஷி (57 கிலோ), சிம்ரன்ஜித் (60 கிலோ), லோவ்லினா (69 கிலோ), பூஜா (75 கிலோ)